Wednesday 31 August 2022

விடைகள்

நான் அப்போது பள்ளி மாணவனாயிருந்தேன். 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது இரண்டு வெவ்வேறு வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அருகருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். சமயத்தில் பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு அந்த அருகாமையைப் பயன்படுத்தி ஏதேனும் விடைகளை சொல்லித் தருவதுண்டு. தேர்வு அறையின் கண்காணிப்பாளரைத் தாண்டி நிகழ வேண்டும். மேலும் கீழ் கிளாஸில் படித்தது பெரிய கிளாஸ் மாணவனுக்கு நினைவில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு சாத்தியம் மிகக் குறைவு. அதிகபட்சம் ‘’சரியான விடையைத் தேர்ந்தெடு’’ , ‘’கோடிட்ட இடங்களை நிரப்புக’’, போன்ற ஒரு மார்க்  ஒரு வார்த்தை பதில்களை மட்டுமே சொல்லித் தர முடியும். 

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தான்.  சமூக அறிவியல் தேர்வு அந்த பையனுக்கு. விடைகள் தெரியாமல் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். எனக்கு வரலாற்றின் மீது அப்போதே பேரார்வம் உண்டு. அவனுடைய கேள்வித்தாளை வாங்கி ஒரு மார்க் கேள்விகளைப் பார்த்தேன். எல்லா விடையும் எனக்குத் தெரிந்திருந்தது. பதில்களை டிக் செய்து கொடுத்தேன். தேர்வு முடிந்து தேர்வு விடுமுறைகள் முடிந்து அவனை பள்ளியில் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து , ‘’தம்பி ! நீ டிக் செய்த எல்லா பதில்களும் கரெக்ட்’’ என்றான். 

அனேகமாக ஏழாம் வகுப்பு பையன் சொல்லிக் கொடுத்து பதில் எழுதிய ஒன்பதாம் வகுப்பு பையன் அவனாகத்தான் இருப்பான்.