Tuesday 20 September 2022

அஞ்சல் அட்டைகள்

எனக்குத் தெரிந்து அஞ்சல் அட்டையின் விலை 15 பைசாவாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் 25 பைசாவாக ஆனது. இப்போது ஒரு அஞ்சல் அட்டையின் விலை 50 பைசா.  

இவ்வளவு குறைவான தொகையில் பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டை பயணிக்கக் கூடியது என்பது அற்புதமான ஒன்று. இதனை அர்ப்பணிப்புடன் கூடிய ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் சாத்தியமாக்குகிறார்கள். 

சிறு வயதில் நான் அஞ்சல் அட்டைகள் எழுத விரும்புவேன். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என அடிக்கடி அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதுவேன். 

ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை வழங்க உத்தேசம் கொண்டு செயல்களைத் துவக்கி உள்ளேன். ஏற்கனவே பரிச்சயம் உள்ள கிராமம். நமது உத்தேசத்தை அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று சேர்க்க வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த தகவல் சாதனம் அஞ்சல் அட்டை. குறைந்தது 250 குடும்பங்கள் இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும் சென்றடைய தபால் கார்டு உதவும் என்பதும் தேக்கு குறித்து மக்களுக்குள் ஒரு பேச்சு உருவாகவும் துணை புரியும் என்ற எதிர்பார்ப்பும் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம். 

ஒரு நாளைக்கு 25 கார்டாவது எழுதி போஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை 10 நாட்களில் நிறைவடையும். ஒன்று ஒன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.