Thursday 8 September 2022

கோப்பு

இணையத்தின் மூலம் வாங்கிய பிளாஸ்டிக் டிராவ் என் மேஜைக்கு அருகில் உள்ளது. அது காகிதங்களால் நிரம்பி இருக்கிறது. காகிதங்கள் எப்படியோ தங்களுக்கான இடத்தையும் தாண்டி எடுத்துக் கொள்கின்றன. கிளை மூலம் இலை விரியும் மரத்திலிருந்து தயாராகி வந்ததால் காகிதங்களுக்கு இந்த இயல்பா என்பது தெரிய்வில்லை.  

கோப்புகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலை. சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவது குறித்த கோப்பில் அனுப்பிய ம்னுக்களின் நகல்கள், வரப்பெற்ற பதில்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரிய மனுக்களின் நகல்கள் என அனைத்தையும் கோப்பில் வைத்திருப்பேன். மனு அனுப்பும் போது கையொப்பமிட்ட பின் அதனை நகல் எடுக்க வேண்டும். அந்த நகலில் பதிவுத் தபாலில் அந்த மனுவை அனுப்பியதற்கான ரசீதை ஒட்டி வைக்க வேண்டும். 

சர்க்கார் என்பது ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டியதற்கான பயிற்சியையும் பழக்கத்தையும் கொண்டது. அதனால் எல்லா மனுக்களுமே நிலுவையில் வைக்கப்படும். அனுப்பும் மனு நிலுவையில் மட்டுமே வைக்கப்படும் என்பதும் இறுதி கட்டம் நீதிமன்றம் என்றும் நமக்குத் தெரியும் என்பதால் மனு அனுப்புதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி விபரம் கோருதல், மனு அனுப்பி 30 நாள் ஆன பின் மேலதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற விபரத்தை கொண்டு செல்லுதல், தகவல் உரிமைச் சட்டத்தின் கெடுவுக்குள் பதில் வரவில்லை என்றால் முதல் மேல்முறையீடு செய்தல், மேலதிகாரிக்கு அனுப்பிய மனு 30 நாள் ஆன பின் நினைவூட்டல் ஒன்று அனுப்புதல் என இந்த வரிசை முதல் மனுவை அனுப்பும் போதே மனக்கண்ணால் காணப்பட்டு விடும். 

மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் மனுவை பதிவு செய்த பின்னரும் இத்தனை நடவடிக்கையும் தேவைப்படும். காகிதங்களுடன் அரசாங்கத்துக்கு நூற்றுக்கணக்கான் ஆண்டுகள் பழக்கம் உள்ளது. அதற்கே ஊழியர்கள் அசைந்து கொடுப்பதில்லை. கணிணி இன்னும் அவர்கள் பிரக்ஞைக்கு முழுமையாக வரவில்லை. ஆனாலும் கணிணியில் பதியப்படும் புகார் உயர் அதிகாரிகளாலும் மேலதிகாரிகளாலும் தவிர்க்க இயலாமல் அவர்கள் மேஜையில் கணிணித் திரையில் எப்போதும் பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் அது அவர்களுக்கு ஒரு அசௌகர்யம். 

சட்ட விரோதமாக மரம் வெட்டப்படுவது தொடர்பான சட்டங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். அவ்வப்போது ஒரு புது எண்ணம் ஒரு புது சிந்தனை அந்த வாசிப்பை ஒட்டி உருவாகும். சட்டங்களைப் படிப்பது என்பது வித்யாசமான அனுபவம். நான் எண்ணாதது யூகிக்காதது நாம் காணத் தவறியது ஆகிய்வை நம் முன் வந்து நிற்கும். 

ஒரு ஸ்கேனர் மெஷின் வாங்கி விடலாமா என யோசிக்கிறேன். அதிலேயே ஜெராக்ஸும் எடுத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

நகல்களைப் பராமரிக்க ஒரு தனிக் கோப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் எண்ணுகிறேன். 

ஒரு குடிமகனாக நான் எனது கடமையைச் செய்வதாகவே எண்ணுகிறேன்.