Thursday 8 September 2022

தி.ஜாமம்

 சில வருடங்களுக்கு முன்னால், ஓர் இலக்கிய வாசகரைச் சந்தித்தேன். அப்போது இளைஞர். இப்போதும் இளைஞர்தான். தமிழில் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. அதனினும் இலக்கியத்தை முக்கியமான ஒன்றாக முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகக் கருதுபவர்கள் குறைவு. நான் சந்தித்த இளைஞர் இலக்கிய ஆசான்கள் மீது பெரும் மதிப்பும் பெரும் பித்தும் கொண்டு ததும்பிக் கொண்டிருந்தார். எங்கள் ஓரிரு சந்திப்புகளிலேயே அவர் புதுமைப்பித்தன் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்து சொன்னார். அப்போது அவர் தி. ஜானகிராமனை அதிகம் வாசித்ததில்லை. நீங்கள் தி.ஜானகிராமன் வாசித்துப் பாருங்கள் என்றேன். தி. ஜா வின் ஓரிரு கதைகளை அவருக்குச் சொன்னேன். ‘’சிலிர்ப்பு’’, ‘’பாயசம்’’ ஆகிய்வை. பின்னர் அவர் தி.ஜா முழுத் தொகுப்பு வாங்கி அவரது அனைத்துக் கதைகளையும் வாசித்து விட்டு ஒவ்வொரு கதை குறித்தும் என்னிடம் மணிக்கணக்காகப் பேசுவார். இப்போது அவருக்கு பிடித்த இரு தமிழ் ஆசான்கள் புதுமைப்பித்தனும் தி.ஜா வும். எங்கள் உரையாடல்கள் எனக்கு புதுமைப்பித்த்னையும் அவருக்கு தி.ஜா வையும் மேலும் புரிந்து கொள்ள உதவின.