Friday 9 September 2022

நீங்குதல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
-திருக்குறள்

சில எளிய விஷயங்கள் அனுபவமாகும் போது சில சிமயம் பெரும் திகைப்பு உண்டாகி விடுகிறது. 

இன்று என்னுடைய மேஜையையும் ஷெல்ஃபில் இருக்கும் என்னுடைய காகிதங்களையும் அடுக்கி வைக்க முயன்றேன். பல நாட்கள் பல மாதங்கள் ஆகி ஒரே இடத்தில் இருப்பதால் எத்தனையோ தேவையில்லாத காகிதங்கள் நிறைந்து விட்டன. எடுக்க எடுக்க வந்து கொண்டேயிருப்பது ஒருவித அச்சத்தை அளித்தது. நம்மை அறியாமலே சில விஷயங்கள் இவ்வாறு சூழ்ந்து விடுகின்றன. 

சொத்து ஆவணங்களின் நகல்கள், சொத்து வரி ரசீதுகள், பதிவுத்துறை ரசீதுகள் என அவை ஒருபக்கம். பொது விஷயங்கள் குறித்த மனுக்கள், தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள், நகல்கள், பதிவுத் தபால் ஒப்புகைகள் என அவை ஒரு பக்கம். பெருமளவு ஒழுங்கு படுத்தி விட்டேன். 

இந்த எளிய விஷயம் கூட நமது ஆற்றலை இந்த அளவு எடுக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது என்றாலும் இப்போது அதனை உணர்ந்து கொண்டேன். 

இந்த விஷயத்திலிருந்து ஒரு படிப்பினை எனக்குக் கிடைத்தது. தினசரி நாம் புழங்கும் வெளியில் ஒரு நல்லொழுங்கை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றால் நமது விடுதலை அங்கிருந்தே தொடங்கும் என்று உணர்ந்தேன்.