Sunday 11 September 2022

நுழைவு

இன்று காலை , மதியம் ஆகிய இரு வேளையும் உணவு உண்ணவில்லை. மாலை ஒரு வேளை மட்டும் உணவு அருந்தினேன். சூரியன் அஸ்தமனம் ஆன பின் உணவு அருந்துதல் நலம். எனினும் சற்று முன்பாகவே உணவு உட்கொண்டேன். முதல் மூன்று நாட்களை விரதத்துக்கான தினசரியையை வகுத்துக் கொள்வதற்கான அவதானமாகக் கொள்ளலாம் என எண்ணினேன். 

சமணம் உணவை உடல் இயங்குவதற்கான ஆற்றலை வழங்கும் ஒன்றாகக் காண்கிறது. ஒவ்வொருவருக்கும் உடல் இயங்க எவ்வளவு ஆற்றல் தேவையோ அந்த ஆற்றல் மட்டுமே உடலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது சமணத்தின் வழிமுறை. 

பகலில் பசி இருந்தது. மெல்ல மெல்ல அதனைக் கடந்தேன். உடல் எத்தனையோ நாட்களில் மிகையாக ஆற்றலைச் சேர்த்துள்ளது. அவற்றை இந்த நேரங்களில் எடுத்து பயன்படுத்தத் தொடங்கும். 

பலமுறை கடினமான விரதங்களைத் தொடங்கி எண்ணியவாறு நிறைவு செய்ய முடியாமல் போனதால் இந்த முறையும் அப்படி ஆகி விடுமோ என்ற பதட்டம் இருந்தது. எனினும் ஒரு நாளைக் கடந்ததும் மனம் நம்பிக்கை கொண்டது. 

உடல் , மனம் மற்றும் ஆற்றல் இவற்றினிடையே ஓர் ஒத்திசைவைக் கொண்டு வர நாம் பழக வேண்டும். உண்மையில் வாழ்க்கையில் பழக வேண்டிய பயில வேண்டிய விஷயம் இதுதான். உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் உடலை வலுவாக்குபவை. உடலில் சேகரமாகும் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துபவை.  

உலகெங்கும் கணிசமான மனிதர்களின் உடல் உழைப்பு அனேகமாக இல்லை என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது. உழைப்பு அற்ற உடல் ஒரு சுமை. உலகில் பல சமூகங்கள் உடற்பருமன் நோய்மைக்கு ஆட்பட்டுள்ளன. ஒருபுறம் பசிக்கு உணவில்லாத மக்கள் இன்னொருபுறம் உடற்பருமன் நோயாளிகள். பசியைப் பற்றி உணவைப் பற்றி பேசப்படும் எந்த ஒரு விஷயமும் உலகளாவிய ஒரு இடத்துக்கு சென்று விடுவது இயல்பு. 

இன்று ஒரு சிறுகதை எழுதினேன். 

சில நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

ஒரு நூல் வாசிக்கத் தொடங்கினேன்.