Monday 5 September 2022

தீர்த்தம்

நீரை வாழ்வளிக்கும் அமிர்தமாக உணர்வது இந்திய மரபு. நதியை நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்கு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அன்னையாகக் காண்பது இந்தியர்களின் இயல்பு. இந்தியர்கள் நதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சுக துக்கங்களை நதியே அறிகிறது. அவர்களுடைய பிராத்தனைகளை நதியே சுமந்து செல்கிறது. அவர்களுடைய துயரங்களை நதியே நீக்குகிறது. நதியில் மூழ்குதல் என்பதை ஒரு வழிபாடாக மேற்கொள்வது இந்தியர்களின் பழக்கம். காவிரியிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் எனது வீடு அமைந்துள்ளது. இன்று காலை கருக்கல் பொழுதில் காவிரிக்குச் சென்றேன். நதி சலசலக்கும் ஓசை இசையெனக் கேட்டது. நதியில் மூழ்கினேன். மீண்டும் மீண்டும் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உடலும் மனமும் உணர்வும் பெரும் நம்பிக்கை கொண்டன. ஒரு நதித்தடம் என்பது எத்தனை பேருக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையின் சாட்சியம். இந்த நதியில் எத்தனை மகத்தான மனிதர்கள் மூழ்கி எழுந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயங்களின் ஆதாரமாக நதி இருந்திருக்கிறது. அகம் நதியென பிரவாகிக்க வேண்டியது. வாழ்வு நதியென அமைய வேண்டியது.  

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் !