Wednesday 7 September 2022

பாபநாசம்

நான் சிறுவனாயிருந்த போது , இரண்டு ஆண்டுகள் பாபநாசத்தில் குடியிருந்தோம். அதாவது , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம். காவிரியும் அதன் கிளை நதிகளும் பாபநாசத்தை தன் மகவெனக் கையில் ஏந்திக் கொள்ளும். வருடத்தில் முதல் முறையாக தண்ணீர் வரும் போது ஆற்றுமணலில் நீர் உள்ளே செல்லும் போது மணலின் இடைவெளிகளிலிருந்து ‘’குபுக் குபுக் குபுக்’’ என காற்று வெளிவரும் ஓசை கேட்கும். ஆறு முழுக்க அந்தப் பேரோசை நிரம்பி ஓங்காரமென ஒலிக்கும். குடமுருட்டி என ஒரு ஆறு. அதில் நான் குளிக்கச் செல்வேன். ஆற்றில் இறங்கினாலே சிறு சிறு மீன்கள் வந்து உடலில் லேசாக கடிக்கும். என் மொத்த உடலையும் மீன்கள் கொத்தி தின்று விடுமோ என நினைப்பேன். நிறைய பேர் உடன் குளிப்பதால் அவ்வாறு நடக்காது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன். 

இன்று காவிரியில் குளித்த போது உடலை சில மீன்கள் கொத்தின. மீன்களால் கொத்தப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.