Monday 31 October 2022

களையெடுப்பு - நிறைவு

இன்று காலை ஏழு மணி அளவில் விஜயதசமி அன்று தேக்கு நட்ட நிலத்துக்கு மீண்டும் சென்றேன். வயல்வெளியில் உள்ள பணி நேற்று மாலையே நிறைவு பெற்றிருந்தது. காவிரியின் கிளை நதியின் கரையில் உள்ள தேக்கஞ்செடிகளுக்கு மட்டும் களையெடுக்க வேண்டியிருந்தது. காலை ஒரு களைக்கொட்டு எடுத்துக் கொண்டு பைக்கில் புறப்பட்டேன். தேக்குச் செடிகளைப் பாதுகாக்கும் விதமாக மூங்கில்முள் வேலி அமைத்திருந்தார்கள். படலைத் திறந்து கொண்டு சென்று களைகளைக் கொத்திக் கொண்டிருந்தேன். நெல் வயல் திடலில் 50 கன்றுகள் உள்ளன. ஆற்றங்கரைத் திடலில் 20. இங்கே எண்ணிக்கை குறைவு என்பதால் விரைவாக வேலையை நெருக்கிக் கொண்டிருந்தேன். நிலத்தின் உரிமையாளர் தனது வயலைப் பார்வையிட வந்தவர் என்னைக் கண்டதும் ஆச்சர்யமடைந்தார். அவரிடம் நேற்று மாலையும் வருகை புரிந்ததைக் கூறினேன். அங்கே சில விவசாயிகள் குழுமினர். அனைவரும் கன்றின் வளர்ச்சியைக் கண்டார்கள். நான் பணி முடிந்ததும் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் என் நண்பரின் 3 ஏக்கரின் தேக்குத் தோப்புக்குச் சென்றேன். நண்பர் என்னை அழைத்திருந்தார். மழை பெய்ய கன்றுகள் சர சர என வளர்கின்றன. பள்ளிப் பாடத்தில் ‘’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’’ என்று படித்திருப்போம். அதன் அர்த்தம் என்ன என்பதை நேரடியாகக் காண்கிறேன். இரண்டு நாள் இடைவெளியில் சென்றால் கூட செடியின் வளர்ச்சி கண்களுக்குத் தெரிகிறது. இந்த மழைக்காலம் அமைதியாக அவதானித்தால் மட்டும் போதும் என பேசிக் கொண்டோம். இந்த வயலில் நண்பர் சில நாட்களுக்கு முன்னர் பணியாளரை அமர்த்தி களை எடுத்திருந்தார். 

என்னுடைய தொழில் தொடர்பான பணிகள் இருந்தன. எனவே விரைந்து வீடு திரும்பினேன்.