Saturday 29 October 2022

கள்ளி

நாற்பது அடி அகலமும் அறுபது அடி நீளமும் கொண்டது ஒரு மனை. தி. ஜா இந்த சிறுகதையில் ‘’ஏழு மனுஷ அகலம் பதினோரு மனுஷ நீளம்’’ என்கிறார். 

பட்டணம் மனிதர்கள் பிதுங்கி நெளியும் வெளி. பட்டணத்து மக்கள் விதவிதமாக நடந்து கொள்கிறார்கள். விதவிதமாக காரணம் சொல்கிறார்கள். தங்கள் வசதிக்கேற்றார் போல் விதவிதமான நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது எல்லா ஊருக்கும் பொருந்தக்கூடியது என்றாலும் பட்டணத்தில் இது ஒரு வீசம் கூட என்று எடுத்துக் கொள்ளலாம். 

கிருஷ்ணன் எளிய மனிதர். உதவி என்று கேட்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர். அவரிடம் கைமாற்றாக கடனாகப் பணம் வாங்கியவர்கள் பலவிதத்தில் பல காரணங்களால் திருப்பித் தராமல் இருக்கிறார்கள். யாருக்கும் இனி கடன் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணன். 

சுப்பண்ணா தனது மகன் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி உதவி கேட்டு மன்றாடுகிறார். கிருஷ்ணனிடம் கையில் பணம் இருக்கிறது. பலரிடம் பெற்ற அனுபவத்தால் சுப்பண்ணா நம்பும்படியாக தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். 

அன்று இடிமின்னலுடன் மழை பொழிகிறது. பெருமழை. பேரிடி. கிருஷ்ணனின் மகள் அலங்காரத்துக்கென வளர்க்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த கள்ளிச்செடியை மழையிலிருந்து பாதுகாக்க மாடிக்கு விரைந்து ஓடுகிறாள். 

எதற்கும் உதவாத ஒரு கள்ளிச்செடி இத்தனை கரிசனம் பெறுவதை கிருஷ்ணனை ஓர் அகமாறுதலுக்கு உள்ளாக்குகிறது. 

மழை சற்று ஓய்ந்ததும் குடையை எடுத்துக் கொண்டு போய் சுப்பண்ணாவிடம் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து விட்டு வருகிறார்.