Wednesday 19 October 2022

சி. பி. கி. ரா. ம். ஸ் - விளைவு

சி. பி. கி. ரா. ம். ஸ் குறித்து முன்னரே எனது தளத்தில் எழுதியிருக்கிறேன். இது மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் புகார் துறையின் இணையதளம். மக்களுக்கு அரசுத்துறைகள் மீது அரசு அலுவலகங்கள் மீது அல்லது அவர்களுக்கு நேரடியாகத் தொடர்புடைய விஷயங்கள் மீது புகார் ஏதேனும் இருப்பின் இந்த தளத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலதிகாரிகள் பலருக்கு ஒரே நேரத்தில் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியிடம் இந்த விஷயம் சென்று சேரும். மேலதிகாரிகள் கவனம் இருப்பதால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை துரிதமாக நிகழும் வாய்ப்பு அதிகம். எந்த விதமான புகாராக இருந்தாலும் நாற்பது நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் அல்லது தீர்வு காணப்பட வேண்டும் என்பது இதன் கால நியதி. 

என்னுடைய முதல் புகாரை சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம் மீது பதிவு செய்தேன். அதில் பதிவு செய்ய அந்த தளத்தில் உள்நுழைகையில் முகவரியைப் பதிவு செய்யக் கோரியது. கணிணியில் மாநிலம் பதிவு செய்தால் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களைக் காட்டும். அதில் மயிலாடுதுறை மாவட்டம் இல்லை. மயிலாடுதுறை புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் அதன் பெயர் இல்லை. பழைய மாவட்டமான நாகப்பட்டினத்தை குறிப்பிட வேண்டியிருந்தது. 

இந்த விஷயத்தை சுட்டிக் காட்டி மயிலாடுதுறையை மாவட்டங்களின் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். சி. பி. கி. ரா. ம். ஸ் தில்லி அலுவலகம் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பிரிவுக்கு அனுப்பியது. வெகு நாட்கள் இருந்த பின் இரண்டு நாட்களுக்கு முன் தில்லிக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட் முடிவுகள் என்ன என்று நாம் அவ்வப்போது அந்த தளத்திற்கு சென்று பதிவு எண்ணை உள்ளிட்டு அறிய முடியும். நேற்று இரவு கூட நிலவரம் என்ன என்று பார்த்தேன். நிலுவை என்ற பழைய நிலையே இருந்தது. 

இன்று ஒரு அலைபேசி அழைப்பு. சுட்டிக்காட்டப் பட்ட விஷயம் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்கள். நான் தளத்தில் சோதித்தேன். மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. 

சற்று கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் ‘’சராசரி’’ என மதிப்பீடு அளித்தேன்.