Saturday 29 October 2022

குழந்தைக்கு ஜூரம்

ஓர் ஏழை ஆசிரியரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை; ஜூரம் நெருப்பாய்க் கொதிக்கிறது. மருத்துவம் பார்க்க போதிய பணம் கையிருப்பில் இல்லை. பணபாக்கி தர வேண்டிய ஒருவரைப் பார்த்து பாக்கியை வாங்கி வரலாம் என எண்ணுகிறார். எனினும் அவருக்கும் இவருக்கும்  இனி முகத்தில் விழிக்கக்கூடாது என்று முடிவு செய்து அறிவித்த அள்வுக்கு மனஸ்தாபம். இருந்தாலும் சூழலின் தீவிரம் கருதி அங்கே செல்கிறார். சென்ற இடத்தில் சென்றவர் வீட்டில் அவர் மனைவி ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் யாரும் வரும் நிலையில் இல்லை. ஆசிரியர் மூன்று மருத்துவர்களைச் சென்று பார்க்கிறார். மூவருமே வர மறுக்கின்றனர். தனது பால்ய நண்பரான மருத்துவர் ஒருவரை இரண்டு கிலோமீட்டர் தள்ளி சென்று பார்த்து நிலைமையை விளக்கி அழைத்து வருகிறார். ஆசிரியருக்காக வருகிறார் நண்பரான மருத்துவர். நோயாளியைப் பரிசீலித்து உடன் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இந்த அலைச்சலில் தனது குழந்தைக்கு ஜூரம் என்ற விஷயமே ஆசிரியருக்கு மறந்து விடுகிறது. ஞாபகம் வந்து குழந்தையை நோக்கி வீட்டை நோக்கி நடக்கிறார் ஆசிரியர். தி.ஜா வின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘’குழந்தைக்கு ஜூரம்’’.