Saturday 15 October 2022

திண்ணை வீரா

ராமநாதபுரம் கலெக்டர் ஆஃபிஸில் பணி புரியும் கதைசொல்லி நண்பன் செந்திருவைக் காண்பதற்கு தஞ்சாவூர் ஜில்லா கிராமம் ஒன்றுக்கு வருகிறான். குத்தாலத்துக்கும் ஆடுதுறைக்கும் பக்கத்தில் இருக்கும் கிராமம். கதையில் ஊர் பெயர் இல்லை. கதையில் வரும் உரையாடலில் இந்த குறிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. கதைசொல்லி வானம் பார்த்த பூமியிலிருந்து வருபவன். அவனது கண்களுக்கு தஞ்சை மண் நிழலாகவும் நீராகவும் தெரிகிறது. உணவு தானியங்கள் வாசலுக்கு வாசல் குவிந்து கிடப்பதை ஆச்சர்யமாகப் பார்த்த வண்ணம் நண்பனின் ஊருக்கு வந்து சேர்கிறான். 

நண்பன் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு அசல் தஞ்சாவூர் நிலச்சுவான்தார் வசித்திருக்கிறார். திண்ணையில் இருந்தவாறே ஊரின் கொடுக்கல் வாங்கல் லெவி டெவி விஷயங்களைப் பைசல் செய்கிறார். அழுத்தமான குரல். தொடர் வார்த்தைப் பிரயோகங்கள். ‘’எட்டுக் கண்ணை விட்டெறிந்து ‘’ மேற்பார்வையையும் செயல் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்பவர். ஊர் மக்களிடம் ‘’திண்ணையிலிருந்து இப்ப எழுந்து வந்தன்னா’’ என ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். 

காலையிலிருந்து திண்ணையில் உட்கார்ந்திருப்பவர் மாலை விளக்கு வைத்ததும் வீட்டுக்குள் சென்று விடுகிறார். அவர் எவ்வாறு வீட்டினுள் நுழைகிறார் என்பதில் சிறுகதைத் திருப்பத்தை வைத்திருக்கிறார் தி.ஜா.