பழைய தமிழ் திரைப்படப் பாடல்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள் இந்தப் பதிவின் தலைப்பு கண்ணதாசனின் வரி என்பதை நினைவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள். ‘’ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’’ என்ற பாடல்.
இன்று எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஊரின் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர். நாளின் பெரும்பாலான பொழுது மருத்துவமனையிலேயே இருக்கும் விதமான வாழ்க்கைமுறை அவருடையது. காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வார். மதியம் மூன்று மணி வரை அங்கிருப்பார். வீடு திரும்பி மதிய உணவு அருந்தி விட்டு மீண்டும் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டுச் செல்வார். இரவு வீடு திரும்ப ஒன்பது மணி ஆகி விடும். யார் மூலமோ ‘’காவிரி போற்றுதும்’’ மரம் நடும் பணிகள் குறித்து அறிந்திருக்கிறார். அவருக்கு மரம் நடுதல், மரக்கன்றுகள் தயார் செய்தல், மலர்ச்செடிகள் உற்பத்தி ஆகிய விஷயங்களில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. தான் மிகவும் விரும்பும் மிகவும் நேசிக்கும் இவ்வாறான விஷயங்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லையே என்ற மனவருத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது கிராமங்களில் மரம் வளர்த்தல் குறித்து ஐயம் ஒன்றை எழுப்பினார். எனது அனுபவத்திலிருந்து நான் அவருடைய ஐயத்தைப் போக்கினேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து நான் எழுதிய பதிவுகளை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவற்றை வாசித்து விட்டு என்னிடம் மீண்டும் பேசினார். அவருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் இருக்கும் தீவிரமான ஆர்வத்தை உணர்ந்து கொண்டேன்.
அவருடைய இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னைத் தற்செயலாக கடைவீதியில் சந்தித்தார். அவரும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு முன்னாலும் இறைப் பூசனைக்குப் பயன்படும் மலர்ச்செடிகள் நட வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்து நூறு மலர்ச்செடிகள் வாங்கித் தர முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு அறுவை சிகிச்சை நிபுணரின் ஞாபகம் வந்தது. அவரை மனதில் உத்தேசித்து இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று சொன்னேன். பின்னர் அறுவைசிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.
‘’பிரபு ! ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க எவ்வளவோ செய்றீங்க. ஆனா இந்த விஷயம் உங்க கவனத்துக்கு வந்ததும் என்னோட ஞாபகம் வந்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறீங்க. ரொம்ப தேங்க்ஸ்’’
‘’நீங்க நிறைய விஷயம் மனசால செய்யணும்னு நினைக்கறீங்க. அது ரொம்ப நல்லது. நீங்க தினமும் பாக்கற ஏரியால நீங்க தினமும் ஹாஸ்பிடலுக்கு டிராவல் பண்ற ஏரியால நீங்க டொனேட் செய்ற செடிகளை அந்த செடிகள் பூ பூக்கறத பாத்தா நீங்க ரொம்ப சந்தோஷமா நிறைவா ஃபீல் பண்ணுவீங்க. அது உங்களை இன்னும் அதிகமா இந்த விஷயம் குறித்து யோசிக்க வைக்கும். அதனால தான் உங்க கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்தேன்’’
‘’நந்தியாவட்டை அல்லது அடுக்கு நந்தியாவட்டை 100 செடிகள்’’
‘’நீங்க சொல்றபடியே செஞ்சுடுவோம்’’. நண்பரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
இன்று காலை அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
‘’பிரபு ! எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு’’
‘’என்ன விஷயம் சொல்லுங்க’’
‘’இப்ப நம்ம டிஸ்ட்ரிக்ட்ல நிறைய கோவில் இருக்குல்ல அந்த கோவிலைச் சுத்தி அங்க இருக்கற சுவாமிகளோட அம்சமா இருக்கற மரங்களை நடணும். அதாவது சிவன்னா வன்னிமரம், வில்வமரம், நாகலிங்க மரம், கிருஷ்ணன்னா கடம்ப மரம் முருகன்னா கருங்காலி செங்காலி மரம் தக்ஷணாமூர்த்தினா ஆலமரம் இப்படியான டிரெடிஷனல் மரங்களை ஒவ்வொரு கோவிலிலும் நடணும்’’
‘’நல்ல ஐடியா . நாம இதப் பத்தி டிஸ்கஸ் செய்வோம்’’
‘’நீங்க ஃபீல்டுல ஒர்க் பண்றீங்க. எனக்கு ஃபீல்டுல ஒர்க் பண்ண டைம் கிடையாது. நான் என்னால முடிஞ்ச மேக்ஸிமம் சப்போர்ட் பண்றன். ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா நீங்க இந்த விஷயத்தை செய்ங்க’’
‘’ஃபீல்டுல ஒர்க் பண்றதுக்கு சமமான விஷயம் தான் ஒரு நல்ல விஷயத்தை மனசால யோசிக்கறதும். மனசுல நினைக்கப்படற ஒரு விஷயம் தான் பின்னாள்ல ஒரு செயலா மாறும். ஒரு செயல் நடக்குதுன்னா அது எப்பவோ யாராலயோ நினைக்கப்பட்டிருக்குன்னு அர்த்தம். அதனால ஐடியா எக்ஸிகியூஷன் ரெண்டையும் தனித்தனியா பாக்க வேணாம். ஒரு நாணயத்தோட ரெண்டு பக்கங்கள் தான் ரெண்டும். ‘’
‘’நானும் யோசிக்கறன் . நீங்களும் யோசிங்க. நாம சேர்ந்து ஒரு ஆக்ஷன் பிளான் தயார் செய்வோம். பிற்பாடு அதை ரொம்ப சீக்கிரமா எக்ஸிகியூட் செய்வோம். ‘’
அவரது ஆர்வமும் தீவிரமும் எனக்கு ஆச்சர்யமளித்தது.
‘’காவிரி போற்றுதும்’’ மிகச் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.