இரண்டு தினங்களுக்கு முன்னால், நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார்.
‘’பிரபு! மெட்ராஸ் போகணும். ஒரு வேலை இருக்கு. நாம ரெண்டு பேரும் போய்ட்டு வந்திடுவோம்’’
’’மெட்ராஸ்க்கா?’’
’’ஆமாம் ஆமாம் மெட்ராஸ்க்குதான். காலைல டிரெயின்ல கிளம்புறோம். ஈவ்னிங் அதே டிரெயின்ல ரிடர்ன் ஆயிடறோம்’’
‘’திருச்செந்தூர் சென்னை வண்டியிலயா?’’
’’ஆமாம் ஆமாம் . அதே வண்டிதான்’’
‘’அந்த வண்டி டைமிங் காலைல 5.45 தானே?’’
‘’நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? இப்ப அதோட டைம் காலை 5 மணி. ‘’
‘’அஞ்சு மணியா?’’
‘’இப்ப இப்ப உங்களுக்கு உலக விபரமே அதிகம் தெரியறது இல்ல பிரபு’’
அவர் கூற்று உண்மையாயிருக்குமோ என்ற ஐயம் இருந்ததால் மௌனமாக இருந்தேன்.
‘’உங்களுக்கு என்ன ஒர்க்?’’
‘’ஒரு லேப்டாப் வாங்கணும்’’
எனக்கு லேப்டாப்பில் தமிழில் எழுதத் தெரியும். அதைத் தவிர மற்ற எந்த தொழில்நுட்ப விபரமும் எனக்குத் தெரியாது என்பது நண்பருக்குத் தெரியும். இருந்தும் ஏன் என்னை கூட வருமாறு கேட்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நண்பரிடம் கேட்க முடியாது.
‘’டிரெயின் டிக்கெட் இருக்கா பாருங்க. இல்லன்னா காலைல கிளம்பி பஸ்ல போவோம்’’
‘’பஸ்ஸா ? சான்ஸே இல்ல. நான் டிரெயின் பாக்கறன்.’’
நண்பர் அலைபேசியில் ரயில்வே இணைய தளத்துக்குச் சென்று ரயில்களின் இருக்கை இருப்புகளை பரிசோதித்தார்.
‘’செந்தூர் ஃபுல்’’
‘’பல்லவன் பாருங்க. காலைல 6.15க்கு விழுப்புரம் பாசஞ்சர் இருக்கு. அதுல போயி விழுப்புரத்துல காலைல 9.15க்கு பல்லவனைப் பிடிச்சுடலாம்’’
நண்பர் அந்த வாய்ப்பையும் பரிசோதித்தார்.
‘’பல்லவனும் ஃபுல்’’
கொஞ்ச நேரம் வேறு ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார்.
‘’பிரபு எர்ணாகுளம் தாம்பரம்னு ஒரு வண்டி இருக்கு’’
‘’புதுசா இருக்கே. நம்ம ஊர் வழியாவா போகுது.’’
‘’ஆமாம் காலைல 6.15க்கு நம்ம ஊர்ல. 11.45க்கு தாம்பரம் போகுது. அன்னைக்கு சாயந்திரம் 3.45க்கு தாம்பரத்துல கிளம்புது. நைட் 8.15க்கு நம்ம ஊருக்கு வந்திடுது. ஆனா வாரத்துல ஒரு நாள் மட்டும் தான் இந்த டிரெயின்’’
வழக்கமான தூக்கமும் கெடாது. இரவு முன் நேரத்தில் ஊர் திரும்பி விடலாம்.
‘’உங்க ஒர்க் மூணு மணி நேரத்துல முடிஞ்சிடுமா?’’
‘’நாம பர்ச்சேஸ் செய்யப் போற கடை குரோம்பேட்டைல இருக்கு. செல்லர் ஒரு ஹோல் சேலர். தாம்பரம் ஸ்டேஷன்ல ஓலா புக் பண்றோம். நேரா குரோம்பேட். அங்க பர்ச்சேஸ் முடிக்கறோம். தாம்பரத்துல லஞ்ச். உடனே ஸ்டேஷன் வந்துடறோம். டிரெயினைப் பிடிக்கறோம். ஊருக்கு வந்துடறோம்’’
எங்கள் ஊர்க்காரர்களுக்கு புறப்பாடு கொஞ்சம் முன் பின் இருந்தாலும் ஊர் திரும்புதல் துல்லியமாக இருக்க வேண்டும்.
நாளை ஒருநாள் பயணமாக சென்னை சென்று திரும்புகிறேன்.