Friday 18 November 2022

நண்பரின் வருகை

சில நாட்களுக்கு முன்னால், வலைப்பூவில் எழுதிய பதிவை வாசித்து விட்டு ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் எனது நெடுநாள் நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கும் எனக்கும் முப்பது வருஷத்துக்கு மேல் பழக்கம். கடுமையான உழைப்பாளி. அவரது ஊர் இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவர் வசிக்கும் பகுதியில் கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இலவச டியூஷன் வகுப்புகள் எடுத்து வந்தார். அவருடைய ஊர் மாணவர்கள் அவர் ஊருக்கு பக்கத்து ஊர் மாணவர்கள் என தினமும் ஐம்பது பேர் அவர் வீட்டில் 3 மணி நேரம் மாலை நேரம் படித்துச் செல்வார்கள். அவருக்கு தனது 51வது வயதில் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் ஆனது. ஏழு ஆண்டுகள் முழுமையாக ஆசிரியப் பணி ஆற்றினார். பணி ஓய்வு பெற்று பத்து ஆண்டு ஆகியிருக்கலாம். சுனாமி நிவாரணத்தின் போது அவருடைய பகுதியில் தீவிரமான பொதுப்பணி ஆற்றியவர்.  எனது வலைப்பூவை வாசித்து விட்டு என்னைக் காண வேண்டும் என்று வீட்டுக்கு வந்தார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். செயல் புரியும் கிராமத்தில் விஜயதசமி அன்று நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகளின் வளர்ச்சியை அவருக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். உடன் புறப்பட்டோம். அந்த 70 கன்றுகளைக் காட்டினேன். நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறினார். சென்ற ஆண்டு நடப்பட்ட தேக்கு மரங்களை இன்னொரு விவசாயியின் வயலில் காட்டினேன். அவை நன்கு பருத்திருந்தன. 

அவரிடம் சொன்னேன் . ‘’ சார் ! விவசாயி வாழ்க்கைல அவன் கைகள்ல சஃபீஷியண்ட்டா ஒரு லட்ச ரூபாய் கூட இருக்க மாட்டேங்குது. அவன் ஒரு பொருளியல் சக்தியா மாறனும். பொருளாதார பலம்தான் அவனுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவன் கிட்ட அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா அவன் கைல பணம் இருக்கறதே இல்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வீட்டுல கல்யாண செலவுக்குன்னு இதெல்லாம் எப்படி சமாளிக்கறதுங்கற கவலையிலயே அவன் வாழ்க்கைல பாதி போகுது. இந்த நிலையமை மாத்தணும் சார். ஒரு கிராமத்துலயாவது மாத்தனும். அதுக்காகத் தான் ஒரு கிராமத்தை கான்செண்ட்ரேட் செஞ்சு ஒர்க் பண்றன்’’

நான் சிறுவனாயிருந்த போதிலிருந்து அவர் அறிவார். அமைதியாக இருந்தார். 

ஐ . டி கம்பெனியில் பணி புரியும் நண்பர் 3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் வயல் இருக்கும் ஊருக்கும் அழைத்துச் சென்று அந்த வயலையும் காட்டினேன். கன்றுகள் ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. 

மீண்டும் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார். நண்பரின் வருகை மகிழ்ச்சி அளித்தது.