Wednesday 7 December 2022

உயிரின் பிரும்மாண்டம்

உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழ் ஒன்றில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையை இன்று வாசித்தேன். கட்டுரையாளர்கள் இரு ஆயுர்வேத மருத்துவர்கள். இந்தியாவில் மருத்துவ சேவை புரிபவர்கள். தாங்கள் சிகிச்சையளித்த - மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்ட ஒரு மனிதரை- எவ்விதம் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை சின்னஞ்சிறு நுண் விபரங்களும் கூட விடுபட்டு விடாமல் படிப்படியாக விளக்கியுள்ளனர்.  

அறுபது வயது கொண்ட மனிதர் ஒருவர் கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார். அலோபதி மருத்துவர்களிடம் ஆரம்ப சிகிச்சை மேற்கொள்கிறார். அவருக்கு சிகிச்சை மிகச் சிறு அளவிலேயே ஆரம்பத்தில் உதவுகிறது. சில நாட்களில் அலோபதி மருத்துவத்தால் அந்த உதவியும் அவர் உடலில் நிகழாமல் போகிறது. அவர் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்தபட்ச அளவுக்கு மிகக் கீழே சென்று விடுகிறது. சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்ற நிலை. தொடர்ந்து ஆக்சிஜன் தரப்படுகிறது. எனினும் அவருக்குத் தரப்படும் அலோபதி மருந்துகள் அவர் உடல்நிலையை சற்றும் மேம்படுத்தவில்லை. அவர் உணவு அருந்துவது குறைந்து கொண்டே போகிறது. எந்த உணவையும் உண்ணும் நிலையில் அவர் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க்கை மிக அசௌகர்யமாக உணர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிட முயல்கிறார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவருடைய நிலையைப் பார்த்து விட்டு வெளியிலிருந்து ஆக்சிஜன் தரப்படாமல் இருந்தால் அவர் மூன்று நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று கூறிவிடுகின்றனர் மருத்துவமனையினர். எந்த அலோபதி மருந்தும் அவரது சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லையே என குடும்பத்தினர் கேட்கின்றனர். அந்த கேள்விக்கு மருத்துவமனையின் அலோபதி மருத்துவர்களிடம் எந்த பதிலும் இல்லை. மருத்துவமனை வேண்டாம் ; தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என குடும்பத்தினரிடம் மன்றாடுகிறார் அந்த மனிதர். குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதரின் மகன் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றினைத் தொடர்பு கொண்டு தனது தந்தையின் உடல்நிலை குறித்து எடுத்துரைக்கிறார். தனது தந்தைக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிட் சூழ்நிலை நிலவுவதால் ஆயுர்வேத வைத்தியர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு நோய்வாய்ப்பட்டவரால் நேரில்  வந்து சேர முடியாது என்னும் நிலை. இருப்பினும் அந்த இக்கட்டான நிலையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அந்த மனிதரின் ஜீவனைக் காக்க தங்கள் முழு முயற்சியையும் முழுத் திறனையும் அளிக்க அந்த இரு ஆயுர்வேத வைத்தியர்களும் தயாராகின்றனர். 

ஆயுர்வேதம் உடலின் மூன்று சமநிலைக்குலைவு காரணிகளாக வாதம், பித்தம், கபம் என்பவற்றை வகைப்படுத்துகிறது. திரிதோஷங்கள் என்று இவை அழைக்கப்படும். மனித உடல் ரசம், ரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்ரம் என்ற ஏழு அடிப்படை அம்சங்களால் ஆனது என ஆயுர்வேதம் சொல்கிறது. சப்ததாதுக்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இந்த தாதுக்கள் அனைத்திலும் மேவியிருப்பது ‘’ஓஜஸ்’’ என்னும் உயிராற்றல். 

தங்கள் சிகிச்சையின் முதல் கட்டமாக நோய்வாய்ப்பட்டவரின் உயிராற்றல் ‘’ஓஜஸ்’’ ஐ தூண்டச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளை நோய்வாய்ப்பட்டவருக்கு அளிக்கின்றனர். அந்த முடிவு நோய்வாய்ப்பட்டவரின் உடல்நிலையில் நல்விளைவை உண்டாக்குகிறது. அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் காண்கிறது. நுரையீரலில் நிறைந்திருக்கும் சளியைக் கட்டுப்படுத்த ‘’வில்வாதி லேகியம்’’ தரப்படுகிறது. அதற்கான பலனும் உடனே கிடைக்கிறது. மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார் என அலோபதி மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒருவர் மூன்று நாட்களில் பாதிக்குப் பாதி என்ற அளவில் நிலை மீள்கிறார். நோய்வாய்ப்பட்டவரின் மகன் தனது தந்தைக்கு தொடர்ந்து வென்னீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அந்த வென்னீர் ஒத்தடமும் பெரும் பயன் தருகிறது. தொலை மருத்துவம் மூலமே இரு ஆயுர்வேத மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சிகிச்சைக் குறிப்புகளை அளிக்கின்றனர். அபாய கட்டத்தை நோயாளி கடந்ததும் அவரது உடல்நிலையை சகஜமாக்க மருந்துகளைப்  பரிந்துரைக்கின்றனர். அவர் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வேகமாக முன்னேறத் தொடங்குகிறது. இருபத்து ஒரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் முழுமையான குணம் பெறுகிறார் அந்த மனிதர். 

மானுடர்களாகிய நாம் உயிர், உடல், வாழ்க்கை என்பதை வெவ்வேறாகப் புரிந்து கொள்கிறோம். அவை தனித்தனியானவை அல்ல. ஒன்றின் வெவ்வேறு வடிவங்களே அவை. அலோபதி என்பது உடலுக்கான மருத்துவம். ஆயுர்வேதம் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றுக்குமான மருத்துவம். அலோபதி மருத்துவன் உடலை மட்டுமே அறிகிறான். ஓர் ஆயுர்வேத மருத்துவன் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றையும் அறிகிறான். அலோபதி மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தின் முன் திகைத்து நிற்கிறான். ஆயுர்வேத மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தை உணர்ந்து புரிந்து அதன் முன் வணங்கி நிற்கிறான். உயிரின் பிரும்மாண்டம் ஆயுர்வேத மருத்துவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறது.