ஆதி ரங்கம்
அப்பால ரங்கம்
ஸ்ரீரங்கம்
சாரங்கம்
பரிமள ரங்கம்
பஞ்ச ரங்க ஷேத்திரங்கள்
பெருமாள் கோயில் பட்டர் சொல்கிறார்
பரிமள ரங்கன்
ஆசுவாசமாக சயனித்திருக்கிறான்
நாபியில் பிரம்மா
பாதத்தில் சந்திரன்
காவிரித் தாயார்
கங்கைத் தாயார்
உடனிருக்க
அர்ப்பணமாகும் மலரின் பரிமளமும்
அர்ப்பணமாகும் துளசியின் பரிமளமும்
வீர சயனத்தை
மேலும் ஏதுவாக்குகின்றன
உற்சவர்
ஐப்பசியில் காவிரி பார்க்க
புறப்படுகிறார்
மாசிமகத்துக்கு
காவிரிப்பூம்பட்டினம் காண
புறப்படுகிறார்
சயனத்திருக்கும் பெருமாளின் மூச்சொலியை
தன் குடும்பத்துடன் வந்திருக்கும்
ஏதோ ஒரு பாலன்
கேட்டு விடுகிறான்
கொஞ்சம் தயங்கி
சொல்லவும் செய்கிறான்
யாரும் முழுதாக நம்புவதில்லை
பெருமாள் புன்னகைக்கிறார்
அவர் புன்னகைப்பதும்
அந்த பாலனுக்குத் தெரிகிறது
அவன் அதை யாரிடமும் சொல்லவில்லை