Wednesday 7 December 2022

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

தமிழ்நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தன்மை அது. அதாவது இங்கே மக்கள் நெருக்கமாக வாழ்வார்கள். எனினும் பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பது சற்றும் தொடப்படாமலே மாற்றத்துக்கான மிகக் குறைந்த வழிகளுடன் இருந்து கொண்டே இருக்கும். அது குறித்த கவனம் அச்சமூகத்தின் மக்களின் கவனத்திற்கே வந்து சேர்ந்திருக்காது. 

காவிரி வடிநிலப்  பிரதேசத்தில் ஓர் ஆணின் உத்யோகம் என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படும் ஒரு விஷயம். உத்யோகம் என்பதையும் இன்னும் நுணுக்கிச் சொன்னால் வருமானம் என்று சொல்லி விடலாம். ஓர் ஆண் வருவாய் ஈட்ட வேண்டும். குறைந்தபட்சமோ அல்லது நடுத்தரமோ அல்லது அதிகமோ. எவ்வாறாயிருப்பினும் வருவாய் ஈட்ட வேண்டும். பத்தில் எட்டு பேருக்கு அது வாய்த்து விடும். விடுபட்டுப் போனவர்களுக்கு ஊரே அறிவுரை சொல்லும். இளக்காரமாகப் பார்க்கும். தாங்கள் உயர்ந்த பீடத்தில் இருப்பதைப் போலவும் குறைந்த வருவாய் ஈட்டுபவன் தரையில் கிடப்பது போலவும் நினைக்கும். 

அவ்வாறான ஒரு ஆண் - குடும்பத்தாலும் ஊராலும் - இளக்காரமாக நினைக்கப்பட்ட ஒருவன் அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நற்செயலை சர்வசாதாரணமாகச் செய்து தனது வாழ்தலுக்கான வருவாயை ஈட்டிக் கொள்கிறான். அந்த செயல் மூலம் அவன் உயர்ந்து நிற்கிறான். ஒரு வாமனன் சட்டென விஸ்வரூபம் கொள்வது போல. 

தி. ஜா வின் சிறந்த கதைகளில் ஒன்று ‘’சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்’’.