Friday 23 December 2022

உத்திரமும் துரும்பும்

எனது நண்பர் ஒருவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். பணியில் இருக்கும் போது ஒரு அரசு ஊழியர் சங்கத்தில் இருந்திருக்கிறார். அது ஒரு கம்யூனிச அமைப்பு. அதனை அவரே என்னிடம் கூறினார். கம்யூனிச அமைப்பில் இருந்தவர் என்பதால் தொடர்ச்சியாக அவர்களுடைய ஊழியர் கூட்டங்கள் மாநாடுகள் ஆகியவற்றில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருந்தமையால் அரசு குறித்து சமூகம் குறித்து அவர்களுக்கே உரிய மேடை மொழியில் என்னிடம் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். 

அரசியல் குறித்த பேச்சு நட்பில் பூசலை உண்டாக்கும் என்பதால் நான் எவரிடமும் அரசியல் குறித்து பேசுவதில்லை. நண்பர் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் குறித்து பெருமிதத்துடன் கூறி என்னை விவாதத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டேயிருந்தார். நான் மென்மையாக நண்பர்களிடம் நான் அரசியல் குறித்து பேசுவதில்லை என்று சொன்னேன். அதன் பின்பும் அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் முன்னர் செய்ததையே செய்து கொண்டிருந்தார். 

அவரிடம் நான் ஒரு விஷயத்தைக் கூறினேன். இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியனில் ஸ்டாலினாலும் பிற கம்யூனிச ஆட்சியாளர்களாலும்  கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 62 கோடி என்பது  உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். திகைப்புடன் ‘’62 கோடியா?’’ என்றார். ஆமாம் என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். 

மேலும் இன்னொரு விபரம் கூறுவோம் என்று இருபதாம் நூற்றாண்டில் மா சே துங் சீன ஆட்சியாளராக இருந்த போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 35 கோடி என்பது தங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். அவர் எதுவும் பேசவில்லை. அவர் மனம் எவ்விதம் இயங்கும் என எனக்குத் தெரியும்.  அவரிடம் ஒரு விபரம் சொன்னேன். 

அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரம்மல் என்பவர் மனித இனத்தில் எழுதப்பட்ட வரலாறு துவங்கிய காலத்திலிருந்து இருபத்து ஓராம் நூற்றாண்டு வரை நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் அதில் இறந்து போன மக்களின் எண்ணிக்கையையும் ஆதாரங்களுடன் அட்டவணைப்படுத்தியிருக்கிறார். அந்த அட்டவணையில் முதல் இரண்டு இடங்கள் ஸ்டாலின் மற்றும் மாவோ என்னும் இரு கம்யூனிச ஆட்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். 

சோவியத் யூனியன் உடைந்த விதமும் அதிலிருந்த நாடுகள் சுதந்திரமடைந்ததும் அவ்வாறு சுதந்திரம் பெற்ற போது அந்த நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் சோவியத் யூனியன் என்பது எத்தனை மூர்க்கமான வன்முறை அமைப்பாக இருந்திருக்கிறது என்பதைக் காட்டியது. ‘’ நீங்கள் இன்னும் உலகம் சோவியத் யூனியன் உடைந்ததற்கு முன்னால் இருந்த நிலையை நினைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தரவுகள் சோவியத் யூனியன் இருந்த போதே இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளியாகிக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் உடைவும் உடைந்த விதமும் அந்த தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்தன.’’ என்று சொன்னேன். 

மேலும் தொடர்ந்து சொன்னேன். ’’ஸ்டாலினிச அழிவுகள் குறித்து நீங்கள் இத்தனை ஆண்டுகளில் கேள்விப்படாமலேயே இருந்திருக்கிறீர்கள். ஏன் அப்படி ஆனது என்று யோசனை செய்து பாருங்கள்’’ 

நண்பர் அதன் பின்னர் என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசுவதில்லை.