Saturday 24 December 2022

மரங்கள் - மனுக்கள்

14 மரங்கள் விஷயத்தில் அந்த விஷயம் தொடர்பான கோப்பின் நகலை வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தொடர்புடைய அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரியிடம் மனு செய்திருந்தேன். அந்த கோப்பு 8 பக்கங்கள் கொண்டது ; ரூ. 16 ஆர்.டி.ஐ கட்டணமாக அனுப்பினால் விபரம் அனுப்பப்படும் என பதில் வந்தது. அந்த சம்பவம் நடந்த பின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தந்த மனுக்களின் எண்ணிக்கையே பதினொன்று. அதன் பின் அலுவலகங்களுக்குள் நடந்த தபால் போக்குவரத்தே இன்னும் பல இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் முழுக் கோப்பும் 8 தாள்கள் கொண்டது எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. அந்த விபரத்தைத் தெரிவித்து  தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பொது தகவல் அதிகாரியின் உயர் அதிகாரிக்கு  முதல் மேல்முறையீடு செய்தேன். அந்த மேல்முறையீட்டை பரிசீலித்த அதிகாரி அந்த கோப்பு 34 தாள்கள் கொண்டது என பதில் அனுப்பினார். அதற்கு உரிய தொகையான ரூ. 68ஐ செலுத்தி அந்த விபரங்களைப் பெற்றேன். ( ரூ.136 அனுப்பியிருந்தேன்). அந்த கோப்பும் முழுமையானது அல்ல. அந்த கோப்பின் முக்கியமான சில பகுதிகள் அதில் இல்லை. 

மேற்படி மனுவை அனுப்பிய அலுவலகத்துக்கு கீழ் இயங்கும் ஒரு அலுவலகத்திடமும் அந்த கோப்பின் நகலைக் கோரியிருந்தேன். அவர்கள் முப்பது நாட்கள் ஆகியும் பதில் அனுப்பவில்லை. முதல் மேல்முறையீடு செய்தேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை. 

எனவே மேற்படி இரண்டு முதல் மேல்முறையீடுகள் குறித்து இரண்டாம் மேல்முறையீட்டை சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்துக்கு அனுப்ப இன்று தயார் செய்தேன்.

பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்ட விஷயத்தில் ஒரு மாதம் முன்னால் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து மரக்கிரயமும் அதற்கு உரிய அபராதமும் விதிக்கப்பட்டு அந்த தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டு செலுத்தப்பட்ட விபரத்தை தனது அலுவலகத்துக்குத் தெரிவிக்குமாறு தனது துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்.

சென்ற மாதம் மரக்கிரயமும் அபராதமும் செலுத்தப்பட்ட ரசீதின் நகலை வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி இரண்டு அலுவலகங்களில் விபரம் கோரியிருந்தேன். முப்பது நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை. முதல் மேல்முறையீடைத் தயார் செய்தேன்.  

இன்று அந்த நான்கு மனுக்களும் தயார் செய்ய கணிசமான நேரம் ஆனது. நாட்கள் செல்ல செல்ல இந்த விஷயத்தின் தீவிரம் இல்லாமல் போய் விடும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். நாம் நிகழ்ந்த பிழைக்கு குறைந்தபட்ச நியாயத்தைத் தான் எதிர்பார்க்கிறோம். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.