Tuesday 27 December 2022

தமிழ் இதழியலின் இன்றைய நிலை

எனக்கு மிகச் சிறு வயதிலிருந்தே தமிழ் செய்தித்தாள்கள் வாசிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் தினமணி வாங்குவார்கள். நான் தமிழ் எழுத்துக்களை எழுத்துக் கூட்டி படிக்கத் துவங்கியதும் அப்பா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது நான் தினமணியின் தலைப்புச் செய்திகளை அப்பாவுக்கு படித்துக் காட்டுவேன். அப்பா காலை 8.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார். ஆகையால் தலைப்புச் செய்திகளை என்னை வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார்; நான் வாசிக்கும் போது அப்பா காலை உணவு அருந்திக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் தலைப்புச் செய்திகளை மட்டும் காதால் கேட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவார். மாலை அல்லது இரவு வீடு திரும்பியதும் செய்தித்தாளை விரிவாக வாசிப்பார். அப்பாவுக்கு செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர் ஆர்வத்தின் காரணமாக முழு செய்தித்தாளையும் வாசிக்கத் தொடங்கினேன்.  

அப்பொழுதெல்லாம் செய்தித்தாளில் செறிவான விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். எவ்விதமான செய்தி வெளியாக வேண்டும் என்பதில் ஒரு விதமான சுயதணிக்கை இருக்கும். ஒரு விஷயத்தின் வெவ்வேறு தரப்புகளுகளின் கருத்துக்களும் வெளிப்பட இடம் தரப்பட்டிருக்கும். நான் தினமணி வாசிக்கத் துவங்கிய போது திரு. ஐராவதம் மகாதேவன் அதன் ஆசிரியராக இருந்தார். அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். தினமணி கதிர் என்ற இணைப்பு வரத் துவங்கிய காலம் அது. தினமணி கதிரில் வெளியாகும் தொடர்களை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். 

இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மற்ற தமிழ் இதழ்கள் அனைத்தும் கட்சிப் பத்திரிக்கைகள் போல் ஆகி விட்டன. லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறோம் என்ற தார்மீகப் பொறுப்பு இன்றி இதழியலை ஒரு வணிகமாகக் கருதும் போக்கு பத்திரிக்கையாளர்களிடம் பெருகி விட்டது. இதழியலில் அடிப்படையான தரம் என்பது மிகக் குறைவாக உள்ளது. பத்திரிக்கைகளின் இடத்தை இன்று இணைய காட்சி ஊடகங்கள் எடுத்துக் கொண்டிருப்பது நலம் பயக்கக் கூடியதா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.