Tuesday 10 January 2023

மரபும் சமூகமும் இயற்கையும்

இந்திய மரபு என்பதை சுருக்கமாக இயற்கையுடன் இயைந்து வாழும் உணர்வு எனக் கூறிவிடலாம். இயற்கை இறையாக உணரப்படுவது உலகிலேயே இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் தோன்றிய சமயங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகளின் இலக்கியங்கள், நுண்கலைகள் என அனைத்திலுமே இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மையும் இயற்கையை வழிபடும் தன்மையும் உள்ளுறையாக இருப்பதைக் காண முடியும். 

தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் மக்களின் சமய நம்பிக்கை தாக்குதலுக்குள்ளானது. திராவிட இயக்கம் தன்னளவில் தனது கருத்தியல் அடிப்படையில் சமயத்தின் மீது தாக்குதல் தொடுப்பதையும் சமயம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகள் மீது தாக்குதல் தொடுப்பதையும் தனது முறைமையாகக் கொண்டது. இயற்கையை தெய்வத்தின் ரூபமாகக் காணுதல் என்பது சமயத்தின் முறைமைகளில் முக்கியமானது. சிவன் என்பவன் கங்கையை சிரசில் கொண்டவன். நிலவையும் நாகத்தையும் அணியாக அணிந்தவன். விஷ்ணு கடலில் வசிப்பவன். மண், மரம், செடி, பிராணி, வானம், காற்று , தீ என அனைத்துமே வணக்கத்துக்குரியவை என்னும் உயரிய உணர்வைக் கொண்டவை இந்திய சமயங்கள். திராவிட இயக்கத்துக்கு இந்திய மரபு குறித்த எந்த புரிதலும் எப்போதும் இருந்ததில்லை. இந்திய மரபுக்குள்ளேயே இருந்த நாத்திக சிந்தனைக்கு மிக நெருக்கமான பிருஹஸ்பதியின் லோகாயதவாதத்தின் எளிய அறிமுகத்தைக் கூட திராவிட இயக்கம் பெற்றிருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் உருவாகி நிலைபெற்றிருந்த நாத்திக இயக்கத்தை தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டது திராவிட இயக்கம். ஐரோப்பாவில் மதத்தின் பெயரால் நடந்த சண்டைகள் மிக அதிகம். சிலுவைப் போர்கள் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு நிகழ்ந்த நிலம் ஐரோப்பா. அந்த ஆறு நூற்றாண்டு கொட்டப்பட்ட குருதியின் விளைவாக உருவான இயக்கம் ஐரோப்பாவின் நாத்திக இயக்கம். கிருஸ்தவ திருச்சபையை எதிர்த்து உருவான இயக்கம் அது. கடவுளின் பெயரால் கிருஸ்தவ திருச்சபை நிகழ்த்தும் அதிகார அரசியலுக்கு எதிரான எதிர்க்குரல் அது. ஐரோப்பாவின் சமூக அமைப்புக்கும் தமிழ்நாட்டின் சமூகக் கட்டுமானத்துக்கும் எவ்வித ஒட்டு உறவும் கிடையாது. திராவிட இயக்கம் சமயத்தை எதிர்க்கிறேன் என்ற பேரில் இந்த மண்ணின் மதிப்பீடுகள் அனைத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள். தொழில்நுட்பத்தின் சாதனைகளை மானுடத்தின் சாதனைகளாக முன்வைத்தனர். தமிழ்நாட்டில் இவ்வாறான பரப்புரை தொடர்ந்து நிகழ்ந்தது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகல் மனிதனின் நுகர்வைத் தூண்டக் கூடியவை. இயற்கையைச் சுரண்டும் இயல்பைக் கொண்டவை. இந்த தொழில்நுட்பம் இயற்கையைக் காக்கும் செயல்களால் சமப்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழ்நாட்டின் மரபே துணையாக வர முடியும். 

ஆனால் கடந்த நூறு ஆண்டுகளாக மரபு எதிர்ப்பு என்னும் நச்சு திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்டுள்ளது. அந்த நச்சு சிறு மிகச் சிறு அளவி்லேனும் மக்கள் அகத்தைத் தீண்டியுள்ளது. இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் தொழில்நுட்பத்தால் நிகழும் இயற்கையின் மீதான சுரண்டல் உருவாக்கும் அழ்விலிருந்து உலகைக் காக்க இயற்கையுடன் இயைந்து வாழ்தலையும் நுகர்வின் மீதான கட்டுப்பாட்டையும் முன்வைக்கின்றன. நம் மரபிலேயே இயல்பாக அமைந்த விஷயங்கள் அவை. 

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை விளக்க முடியும். தமிழ்நாட்டில் வயல்வெளிகளில் உள்ள பாம்புகளை கொல்லக் கூடாது என்னும் பழக்கம் இருந்தது. வயல்வெளி என்றல்ல எங்குமே பாம்புகளைக் கொல்லக் கூடாது ; அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே புதர் மண்டிய இடத்தில் விட்டு விட வேண்டும் என்ற விதியும் கட்டுப்பாடும் இருந்தது. வயலில் உள்ள பாம்புகள் விளைச்சலை உண்டு தீர்க்கும் எலிகளைத் தன் உணவாகக் கொள்பவை என்பதால் எலிகலைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்பதால் அவை அழிக்கப்படக்கூடாது என்பது ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டது. எலியைக் கொல்லும் எலி மருந்து வந்த பின் விவசாயி பாம்புகளை அசௌகர்யமாக உணரத் துவங்கி அவற்றைக் கொல்லலானான். இரண்டு மூன்று தலைமுறைகளில் விவசாயிகள் பாம்பு எவ்விதம் தங்களுக்கு உதவுகிறது என்பதை மறக்கத் துவங்கினான். எலி மருந்தின் விஷத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் தன்மையை எலிகள் உருவாக்கிக் கொண்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் பாம்புகள் இல்லாததால் எலிகள் தடையின்றி பெருகுகின்றன. 

இன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் சூழியல் அழிவுக்கான காரணங்களில் ஒன்று திராவிட இயக்கத்தின் மரபு எதிர்ப்பு பரப்புரை. சூழியல் விழிப்புணர்வு என்பது நமது மரபைப் புரிந்து கொள்ளுதலும் உணர்ந்து கொள்ளுதலுமே.