Monday 9 January 2023

நூறு பூமரங்கள்

இன்று காலை 6 மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். அலைபேசி மணி துயில் கலையச் செய்தது. ஏற்பட்ட முதல் எண்ணம் ஒரு வியப்பு. ‘’இன்று 100 பூமரங்கள் நட நியமித்த பணியாளர் இத்தனை சீக்கிரமா தனது ஊரிலிருந்து புறப்பட்டு விட்டு அந்த செய்தியைச் சொல்ல நம்மை அழைக்கிறார்’’ என்று எண்ணினேன்.  

‘’சார்! சொந்தக்காரங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம கும்பகோணம் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. அவரைப் போய் பாக்கணும் சார்”

எனது தூக்கம் முழுமையாகக் கலைந்து ‘’இன்னைக்கு மரக்கன்றுகளை நட வேறு யாரை ஏற்பாடு செய்வது ?’’ என்ற வினா கவலையாக உருமாற்றம் பெற்றது. 

பணியாளரின் கூற்றுக்கு ஆமோதிப்பைத் தவிர வேறெந்த பதிலையும் கூறி விட முடியாது. அதனால் எந்த பயனும் இல்லை. 

தெரிந்த நண்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைத்து இன்று ஒரு பணியாளர் மட்டும் வேண்டும் என்றேன். 

‘’சார் ! ரெண்டு பேரை அனுப்பலாமா?’’

‘’அனுப்பலாம். ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆள் சம்பளத்தை சமமா பிரிச்சு எடுத்துக்கணும்.’’

‘’இல்லை சார் ரெண்டு பேர் வந்தா ரெண்டு ஆள் சம்பளம் கேப்பாங்க’’

‘’நூறு நந்தியாவட்டை கன்றுகள். காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சா கூட சாயந்திரம் 6 மணிக்கு ஒருத்தரே வச்சுரலாம். ஒரு மணி நேரத்துல 10 கண்ணு வச்சாக்கூட 100 கன்னு ஒருத்தரே நடலாம்’’

‘’ரெண்டு பேர் ரெண்டு ஆள் சம்பளம்னா டிரை பன்றோம் சார்’’

‘’ஒருத்தர் ஒரு ஆள் சம்பளம்னு டிரை பண்ணுங்க’’

ஒரு நண்பர் ஒரு ஆளைப் பிடித்து அனுப்பி வைத்தார். கல்லூரி முடித்த இளைஞன். ஆர்வமாக பணியைத் துவக்கினான். 

நாங்கள் பூமரக் கன்றுகள் நட்ட சாலையில் சென்ற எனது நண்பர் ஒருவர் இரும்புப் பாறை கொண்டு வந்து கொடுத்து உதவினார். 

அரைமணிக்கு ஒருமுறை சென்று மேற்பார்வை இட்டேன். 

சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றையும் செய்தேன். 

மாலை 6 மணிக்குள் 100 பூமரக் கன்றுகள் நடப்பட்டன. அனைத்துக்கும் நீர் ஊற்றினோம்.