Sunday 22 January 2023

நீர்த்தாகம்

செயல் புரியும் கிராமத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது செல்வேன். அங்கே உள்ள நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக எவ்வளவு விரைவில் செயல்களை நிகழ்த்த முடியுமோ அத்தனை விரைவாக அத்தனை அதிகமாக செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.  இருப்பினும் அத்தனை செயல்களையும் மக்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும். நூற்றுக்கணக்கானோரை ஒருங்கிணைக்கும் போது ஒருங்கிணைப்பாளன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கும். 

மழைக்காலம் முடிந்து தை மாதம் பிறந்து விட்டது. காலை நேரத்தில் பனி பெய்து பின்னர் வெயில் பெரிதாக எழத் தொடங்கி விட்டது. தரையின் மேல்பரப்பு காய்கிறது. 

தஞ்சை வடிநிலப் பகுதிகளில் தண்ணீரை நெற்பயிருக்கு அதிக அளவில் அளித்து பழக்கம் உள்ளவர்கள். நில அமைப்பின் காரணமாக வரப்பு மடையைத் திறப்பதன் மூலம் நிறைவயல் நீர் நிரப்புபவர்கள். தண்ணீர் நெல்விவசாயத்துக்கு மிகையாகவே செலுத்தி பழக்கம் உள்ளவர்கள். இருப்பினும் மரங்களுக்கு ஒரு குடத்தில் நீர் நிரப்பி அவற்றுக்கு அளிக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. 

இன்று எழுபது தேக்கு மரக் கன்றுகளுக்கு ஒரு விவசாயியும் நானும் சேர்ந்து நீர் வார்த்தோம்.