Thursday 26 January 2023

நாட்டிற்குழைத்தல்

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்- உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்

-பாரதி


இன்று காலை 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் உள்ள குளத்தின் கரையில் இருக்கும் நன்கு வளர்ந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட இலுப்பை மற்றும் வேப்ப மரங்களை வெட்ட சிலர் முனைவதாக அந்த அலைபேசி அழைப்பு தெரிவித்தது. குளத்தின் கரையில் இருக்கும் செழித்து வளர்ந்த மரங்கள் அவை. அவற்றைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். செய்தி கேள்விப்பட்ட உடன் அந்த மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு ஒரு மனுவை தயார் செய்தேன். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும். இன்று குடியரசு தினம் என்பதால் அரசு விடுமுறை. தபால் அலுவலகம் இருக்காது. ரயில்வே அஞ்சல் நிலையம் மாலை 6 மணியிலிருந்து செயல்படத் துவங்கும். அங்கு சென்று மனுக்களை அனுப்ப வேண்டும். நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நேரில் சென்று மனுக்களின் நகல்களைக் கொடுத்து விட்டு விஷயத்தை நேரடியாக விளக்கி விட்டு வர வேண்டும். தேவைப்படுமென்றால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மரங்கள் வெட்டப்படாமல் இருக்க ஒரு தடையுத்தரவைப் பெற வேண்டும்.



அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் அவை. பொதுமக்கள் பலருக்கு நிழல் அளித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வெட்ட முயற்சி மேற்கொள்வதற்கு எந்த நியாயமான காரணமும் கிடையாது. 

அந்த ம்ரங்களைக் காக்க நாம் நமது முயற்சிகளை மேற்கொள்வோம். நல்லது நடக்கும் என நம்புவோம்.