Friday 27 January 2023

ஒரு வட்டம்

இன்று காலை 9.45 அளவில் ஊரிலிருந்து 20 கி.மீ வடக்கில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் புறப்பட்டேன். என்னுடைய பைக் சைலன்ஸரில் ஒரு சிறு குறைபாடு. பட்டறைக்குச் சென்று அதனை சரி செய்து விட்டு புறப்பட்டேன். சாலைகளில் வாகனங்கள் பெருகி விட்டன. பேருந்துகளை எப்போதாவது ஒன்றும் நான்கு சக்கர வாகனங்களை நிமிடங்களுக்கு ஒன்று என்றும் எதிர்கொள்ள நேரிடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு இப்போது மாநில அரசுப் பேருந்துகள் பல குறைக்கப்பட்டு விட்டன என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். இரு சக்கர நான்கு சக்கர வாகனப் பெருக்கத்தை எந்த சாலையைக் கண்டாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. வாகனங்கள் பெருகியிருப்பதால் சாலைகளை அகலமாக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பல சாலைகள் அடையாளம் தெரியாத அளவுக்கு அகலமாகி இருக்கின்றன. ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மாநிலங்களில் உள்கட்டுமானங்களாக மாறுகின்றன. 

காலை 10.15 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் நின்று கொண்டிருந்தது. அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேரடி உதவியாளர் இருக்கையில் இல்லை ; மாவட்டத் தலைமையிடத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். வருவாய் கோட்டாட்சியர் விடுப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்கள். அலுவகத்தின் ஊழியர்களிடம் மரங்கள் வெட்டப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னேன். கோட்டாட்சியரின் நேரடி உதவியாளருக்கு அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னார்கள். அவர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று அங்கே தகவல் தெரிவிக்குமாறு கூறினார். அங்கிருந்த ஊழியர்களிடம் நான் நேராகச் சென்|று விபரம் சொல்கிறேன் ; நீங்களும் ஒரு ஃபோன் செய்யுங்கள். மேலிடத்திற்கு விபரம் தெரியும் என்றால் நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என்று சொன்னேன். 

உண்மையில் அவ்வாறான நுண்ணுணர்வுகள் அரசு அலுவலர்களுக்கு இருப்பதில்லை ; 99.99 % சதவீதத்தினருக்கு இருப்பது இல்லை. நான் சந்தித்த அலுவலர் மீதி உள்ள 0.01 % சதவீதத்தில் ஒருவர். அதனால் தான் அந்த அளவு அக்கறை எடுத்துக் கொண்டு ஃபோன் மூலம் தன் அதிகாரியிடம் பேசினார். திங்கள்கிழமை அன்று மனு நீதி நாள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பார். அன்று வந்து விஷயத்தை நேரடியாகச் சொல்லுங்கள் என்று கூறினார். இரண்டு நாட்களுக்குள் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே வந்ததாகச் சொன்னேன். நான் சென்ற போது நேற்று அனுப்பிய மனு அவர்களை வந்தடைந்திருக்கவில்லை. தபால் வர காலை 11 மணி ஆகும் என்றார்கள். தபால் கண்டதும் இவ்வாறு ஒரு தபால் வந்திருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்குத் தெரிவியுங்கள் என்று கூறினேன். 

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தெற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரின் அலைபேசி எண்ணை அளித்தார்கள். எனினும் நேரடியாக செல்வதென்று முடிவு செய்தேன். வட்டாட்சியரைச் சந்திக்க முடியாவிட்டாலும் அந்த அலுவலகத்தினரையாவது சந்தித்து விபரம் கூறலாம் என முடிவு செய்து அங்கே சென்றேன். விஷயத்தைச் சொன்னேன். குளக்கரையில் இருக்கும் மரங்களின் புகைப்படங்களைப் பார்த்தார்கள். அவற்றைக் காக்குமாறு கேட்டுக் கொண்டேன். கிராம நிர்வாக அதிகாரிக்கும் மனு அனுப்பியிருப்பதையும் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினேன். 

மரங்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டானது. 

25 கி.மீ மேற்கு திசையில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தேன். வட கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளில் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.