Tuesday 3 January 2023

இரு மரங்கள்

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தெருவில் வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த இரண்டு புங்கன் மரங்கள் ஓரிரு தினங்கள் முன்னால் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு மரங்களுக்கும் நான்கு வயது இருக்கக்கூடும். இருபது அடி உயரம் வளர்ந்திருந்த மரங்கள். மரம் வெட்டும் பணியாளர்களைக் கொண்டு மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு மரங்கள்  வெட்டப்பட்டுள்ளன என்பதை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் முறை காட்டுகிறது. ஒரு மரத்தின் மதிப்பு ரூ.3500 இருக்கக் கூடும். இன்னொரு மரத்தின் மதிப்பு ரூ.2000 இருக்கக் கூடும். 

நேற்று இரு மனுக்களை தயார் செய்தேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று ; வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஒன்று. இரண்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படியான மனுக்கள். மனுவுடன் வெட்டப்பட்ட இரண்டு மரங்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தேன். இந்த இரண்டு மரங்களும் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது முதல் கேள்வி. அனுமதி கேட்டு விண்ணப்பித்தது யார் என்பது இரண்டாவது கேள்வி. அனுமதி அளிக்கப்பட்ட போது மரங்களின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு அந்த மதிப்புக்கான தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டதா என்பது அடுத்த கேள்வி. வெட்டப்பட்ட பின் வெட்டப்பட்ட மரம் பொது ஏலம் விடப்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டதா என்பது இன்னொரு கேள்வி. 

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களே மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் விஷயத்தை வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தெரிவித்து விடும். அனுமதி பெறப்படவில்லையெனில் , பதில் கொடுப்பதற்கான காலக்கெடுவான 30 நாட்களில் தவறிழைத்தவர் யாரெனக் கண்டறிந்து மரக்கிரயமும் அபராதத்தொகையும் வசூல் செய்து விட்டு அந்த தகவலை ஒரு பதிலாக அளிக்க முடியும். அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவே புகார் மனு அளிக்காமல் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவை அனுப்பியுள்ளேன். 

நமது கடமையை நாம் செய்துள்ளோம். அரசாங்கம் தனது கடமையைச் செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம்.