Wednesday 10 May 2023

மூன்று தினங்கள்

 இன்றும் நேற்றும் நேற்றைய முந்தைய தினமுமான மூன்று நாட்களும் மிகவும் முக்கியமான மூன்று நாட்களாக அமைந்திருந்தன. தமிழ் மரபில் ஆலயங்கள் வகித்த சமூக இடம் என்பது மிகவும் பெரியது. ஆலயங்கள் புரிந்த சமூகப் பணி என்பதும் மிகப் பெரியது. சிலப்பதிகாரம் வெவ்வேறு தெய்வங்களின் கோட்டங்கள் பூம்புகார் நகரெங்கும் அமைந்திருந்ததன் சித்திரத்தை அளிக்கிறது. 

இந்தியாவில் மக்கள் கடவுளை தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வுடன் அணுகி வழிபடும் எத்தனையோ ஆலயங்களைக் கண்டிருக்கிறேன். இந்த நாட்டின் பெண்கள் தங்கள் குடும்பத்தின் பிதாமகராக தெய்வத்தை எண்ணி அவரிடம் தங்கள் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நலத்தின் ஆசிகளை அளிக்கக் கோரி உணர்வுருகி வேண்டிக் கொள்வதை பல மாநிலங்களில் பல ஆலயங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். 

திருவாசகத்தில் ஒரு இடம் வருகிறது. ‘’யாத்திரைப் பத்து’’. ஜீவன்கள் தங்கள் தலைவனான பரமாத்வைக் காண செல்வோம் என புறப்பட முயல்கின்றன. பெருந்திரளான ஜீவன்களில் சில ஜீவன்கள் நாம் எல்லைக்குட்பட்டவர்கள் ; முழுமை நிலைக்கு மிக மிகத் தொலைவில் இருப்பவர்கள் ; பந்த பாசங்களில் உழல்பவர்கள். அவ்வாறிருக்க பரமாத்வைக் காண செல்ல வேண்டிய அத்தனை தூரத்தையும் கடப்பதற்கான உடல் பலமோ மனோ பலமோ ஆத்ம பலமோ இல்லாதவர்கள் நாம் . நாம் எவ்வாறு பரமாத்வை நோக்கி செல்ல முடியும் எனக் கேட்கின்றனர். உண்மையில் இந்த கேள்வி புறப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. சிலர் கேட்டு விட்டனர். அவ்வளவே. அப்போது சில ஜீவன்கள் கூறுகின்றன. ‘’நாம் குறையுடைய்வர்கள்தான் எனினும் நமது தலைவன் கருணையின் பெருங்கடல். நாம் அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கிறோம் என அறிந்தாலே பல அடிகள் அவன் ஓடோடி வருவான். நாம் நமது பலத்தை வலிமையை எண்ணி பயணிக்க வேண்டியதில்லை. இறைவனின் கருணையை எண்ணி பயணிக்கலாம் . நம் பயணம் இலக்கை அடையும் என்று கூறுகின்றன. 

ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மூன்று நாட்களும் கம்பன் பாடல்களை ஆலயத்தில் பாடியது மனதை இளகச் செய்தது. உணர்வை மிகவும் நெகிழச் செய்தது.