Wednesday 3 May 2023

பத்திரப் பதிவு (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு ராசி உண்டு. அவர் நிலம் விற்றாலும் நிலம் வாங்கினாலும் பத்திரப் பதிவுக்கு சாட்சியாக இருந்தாலும் அந்த பத்திரப் பதிவு நிகழ சிறியதிலிருந்து பெரியது வரை அவர் தான் எல்லா வேலைகளையும் செய்வது போல ஆகி விடுகிறது. அமைப்பாளர் ஏன் அவ்வாறு ஆகிறது என யோசித்து யோசித்துப் பார்த்தார். நிலவரம் என்னவென்றால் அவருக்கு நிலம், மனை , வீடு குறித்த விபரங்கள் தெரியும். பத்திரம் எழுத உரிமம் பெற்ற எழுத்தரிடம் விபரங்களைக் கொடுக்க செல்லும் போது அந்த நிலம் மனை தொடர்பான முழுமையான தகவல்களுடன் செல்வார். வழக்கமாக அமைப்பாளர் ஏப்ரல் 2ம் தேதியே வீட்டு வரி, சொத்து வரி செலுத்தும் வழக்கம் உள்ளவர். முழு ஆண்டுக்கும் செலுத்தியிருப்பார். அந்த ரசீதுகள், டி.எஸ். எல். ஆர் வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு செல்வார். பத்திர எழுத்தர் அமைப்பாளரிடம் ஒருமுறை சொன்னார். ‘’ சார் !ஒரு டாகுமெண்ட்  எழுத வரும் போது ரொம்ப துல்லியமா எல்லா விபரங்களுடன் வரக்கூடாது ; அதே போல எந்த விபரமும் இல்லாமலும் வரக் கூடாது. இந்த ரெண்டுமே அதிகமா வேலை வைக்கும். ஒரு மையமா இருக்கணும் சார் !’’ . அமைப்பாளருக்கு இதைக் கேட்டதும் ஒரு தமிழ் சினிமா டயலாக் ஞாபகம் வந்தது. ‘’ ஈயம் பூசுனது போலவும் இருக்கணும். ஈயம் பூசாதது போலவும் இருக்கணும்.’’. 

தமிழகத்தில் ஒரு இடத்துக்கு மூன்று பேராக சேர்ந்து செல்லக் கூடாது என்று சொல்வார்கள். இந்தியா முழுக்கவுமே அந்த எண்ணம் உண்டு. மூன்று பேர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே மிக எளிதில் மனப்பிளவு அவர்களுக்குள் உருவாகி விடும். இரண்டு பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பை விட மூன்று பேருக்கு மனப்பிளவு உருவாகும் வாய்ப்பு உண்டு. 

பத்திரம் பதிவு செய்யும் போது வாங்குபவர், விற்ப்வர், பதிவு செய்து தரும் அரசாங்கம் என மூவர் உருவாகி விடுகின்றனர். இந்த மூவருக்குள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு குறுகிய காலத்துக்கு ஏற்பட வேண்டும். நிலம் விஷயங்களில் விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே நடைமுறைப் புரிதல் இருக்க சாத்தியம் குறைவு. 

விதிமுறைகள் அவ்வப் போது மாற்ற்ம் அடைந்து கொண்டே இருக்கும். மளிகைக்கடையில் பொருள் வாங்குவது போல தினம் யாரும் பதிவு அலுவலகத்துக்கு செல்வது இல்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு ஒரு சொத்தை விற்றிருப்பார்கள். அதன் பின் இப்போது விற்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நினைவே அவர்களுக்கு இருக்கும். ஆனால் இப்போது அரசாங்க நடைமுறையில் நிறைய மாற்றம் இருக்கும். 

மக்களுக்கு மிக அணுக்கமாக பதிவு நடைமுறைகள் இருக்க வேண்டும் என அரசு விரும்பும். ஆனால் அது எந்த அளவுக்கு அணுக்கமில்லாமல் இருக்க முடியுமோ அந்த அளவு அணுக்கமில்லாமல் நடக்கும்.

அமைப்பாளரை பத்திரம் பதிவு செய்ய விரும்பும் அவரது நண்பர்கள் உதவிக்காகவும் ஆலோசனைக்காகவும் உடன் அழைத்துச் செல்வார்கள். பத்திர எழுத்தர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கி வாருங்கள் என்பார். அமைப்பாளர் வெளியே வந்ததும் நண்பரிடம் ‘’ இப்ப ஐம்பதாயிரம் ரூபாய்க்கு பத்திரம் வாங்கணும்னு டாகுமெண்ட் ரைட்டர் சொல்றார். அந்த ஐம்பதாயிரம் பத்திரத்துக்கு கமிஷன் ஆயிரம் ரூபாய். ஆனா பத்திரத்துக்கான தொகையை நீங்க டிமாண்ட் டிராஃப்ட்டா கட்டலாம். ஐம்பதாயிரத்துக்கு டி.டி கமிஷன் நூறு அல்லது நூத்து ஐம்பது இருக்கும். ஆன்லைன்ல பேமெண்ட் பண்ணா அது கூட கிடையாது. ‘’. நண்பர் அப்பாவியாய் , ‘’பத்திரத்தை எதுல பிரிண்ட் பண்றது’’ என்று கேட்பார். ‘’சாதாரண கான்கொயர் பேப்பர்ல பிரிண்ட் பண்ணா போதும்’’ . நண்பரால் அப்படி ஒரு பத்திரத்தை கற்பனை கூட செய்ய முடியாது. அவருடைய மனத்தில் பத்திரம் என்றால் மதிப்பு அரசாங்க முத்திரையுடன் அச்சடிக்கப்பட்ட காகிதம் என்றே பதிவாகியிருக்கும். 

உண்மையில், சில ஆண்டுகள் முன் எல்லா பத்திரப் பதிவிலும் பத்திரத்துக்கான தொகை இணையம் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு இட்டது. அதனை எதிர்த்து மாநிலம் முழுதும் பத்திர எழுத்தர்கள் உண்ணாவிரதம் , போராட்டம், தர்ணா நடத்தினர். அரசு பத்திரம் அல்லது ஆன் லைன் மூலம் செலுத்துதல் என்ற இரு வாய்ப்புகளையும் கொடுத்தது. மக்கள் ஆன்லைன் மூலம் செலுத்துதல் தங்களுக்கு மிச்சம் என்று அறியாமல் பத்திரம் நோக்கியே செல்கின்றனர்.