Saturday 20 May 2023

நுழைதல்

 எனது நண்பர் ஒருவர் இலக்கிய வாசகர். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டு தமிழில் தேர்ந்தெடுத்த படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவருடன் இலக்கியம் குறித்து விரிவாகப் பேச ஒரு தருணம் வாய்த்தது. அப்போது அவர் தனது வாழ்வுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு சம்பவம் குறித்து என்னிடம் சொன்னார். அதனை துல்லியமாக வர்ணித்தார். அவர் வர்ணித்த விதம் மூலம் அந்த சம்பவம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் கூறியதை ஒரு நாவலாக எழுதுமாறு சொன்னேன். அவர் எழுதுகிறேன் என்று சொன்னார். நேற்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆடிப்பட்டம் , கல்வி ஆகிய பதிவுகளை வாசித்து விட்டு பெரும் மகிழ்ச்சியுடன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். நாவல் எழுதத் தொடங்கி விட்டாரா என்று விசாரித்தேன். எழுதத் தொடங்கி 50 பக்கங்கள் வரை வந்திருக்கிறார். 50 பக்கம் என்பது சிறப்பான நற்துவக்கம் என்பதை நான் அறிவேன். அவரது முயற்சியைப் பாராட்டினேன். தொடர்ந்து எழுதுமாறு கூறினேன். படைப்பூக்கம் கொண்ட ஒருவர் படைப்புச் செயல்பாட்டுக்குள் நுழைதல் என்பது சொல்லரசிக்கு மகிழ்வளிக்கும் செயல். நண்பருக்கு வாழ்த்துக்கள்.