Tuesday 20 June 2023

மரங்களின் உயிர் மதிப்பு

 உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து - திருக்குறள்


செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் மேற்கூறிய குறள் இடம் பெற்றுள்ளது. உதவியின் மதிப்பு என்பது உதவியின் அளவால் அளவிடப்படக் கூடியது அல்ல ; உதவி செய்யப்பட்டவர்களின் செம்மையான இயல்பைப் பொறுத்து அதற்கேற்ற அளவில் மதிப்பைப் பெறுவது என்பது அதன் பொருள். 

இன்று நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, உச்சநீதிமன்றம் முன் ஒரு வழக்கு வந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பொது இடங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படும் நிலை வரும் போது அந்த மரங்களின் மதிப்பை எவ்விதம் நிர்ணயம் செய்வது என்னும் கேள்வி எழுகையில் எவ்வகையில் நடந்து கொள்வது என்பதற்கான வழிகாட்டல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவ்வகை வழிகாட்டலை அளிப்பதற்காக உச்சநீதிமன்றம் முக்கியமான ஆறு துறைகளின் துறைச் செயலாளர்களின் அளவிலான குழுவை அமைத்திருக்கிறது. இது நிகழ்ந்த ஆண்டு 2021. அந்த குழு தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது. 

அதில் அவர்கள் மரங்கள் வெட்டப்படுகையில் மரங்களின் ‘’டிம்பர் வேல்யூ’’வை மட்டும் கணக்கெடுப்பது என்பது முழுமையானது அல்ல ; அதன் தழைகள் மண்ணுக்கு உரமாகப் பயன்படுகின்றன ; அதன் கிளைகளில் வாழும் உயிரினங்கள் மூலம் மகரந்தசேர்க்கை நிகழ்ந்து பல தாவரங்கள் முளைத்து வளர்கின்றன ; மரம் வளிமண்டலத்துக்கு அளிக்கும் ஆக்சிஜனை அளிக்கிறது ; இவை அத்தனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ‘’டிம்பர் வேல்யூ’’ மட்டும் கணக்கிடப்படுவது சரியான கணக்கீட்டு முறையாக இருக்காது என அக்குழு கூறியிருக்கிறது. 

ஒரு மரத்தின் வயது 100 எனில் அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி என நிர்ணயம் செய்துள்ளது அந்த குழு. ரூ. 74,500 ஐ அடிப்படை மதிப்பாக நிர்ணயித்து மரத்தின் வயது எத்தனையோ அத்தனை மடங்கு அதன் மதிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ( உதாரணத்துக்கு ஐந்து ஆண்டு வயது கொண்ட மரத்தின் மதிப்பு ரூ. 3,72,500).

இந்த மதிப்பீடு மரங்களுக்கு மிகக் குறைந்த ‘’டிம்பர் வேல்யூ’’ நிர்ணயம் செய்து வெட்டுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மேலும் சில வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

14 மரங்கள் விஷயத்திலும், பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் விவகாரத்திலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல் பெரிய அளவில் துணை புரியும் என்ற நம்பிக்கையை அடைந்தேன்.