Tuesday 11 July 2023

செழித்து வளர்க

 இன்று என் நண்பனின் குடும்பத்தில் ஒரு மங்கள நிகழ்வு. 

நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமானவன். என் மீது தீராத அன்பும் பிரியமும் கொண்டவன். எப்போதும் நம்பிக்கையளிக்கும் வண்ணமும் ஊக்கம் தரும் விதமாகவும் பேசுவான். என் மீது மட்டும் அல்ல அவனுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்குமே அவன் இனிமையானவன். யாவர்க்கும் இனியவனாயிருப்பது அவனது இயல்பு. ’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தொடர் ஆதரவை அளிப்பவன். 

இன்று அவனது வாழ்வில் முக்கியமான ஒரு தினம். அவனை வாழ்த்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்த்தேன். 

செயல் புரியும் கிராமத்தில் பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கி ஆகிய காய்கறிகளின் விதைகளை முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்க எண்ணம் கொண்டிருந்தேன். அதற்கான செயல்களை இன்று செய்யலாம் என இருக்கிறேன். கிராமத்தில் இருக்கும் 1000 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறெனில் 4000 விதைகள் தேவை. 

இன்று காலை சென்று மக்கிய எருவை ஒரு வாளி எடுத்து வர வேண்டும். குப்பைக் கிடங்கில் மக்கிய எருவை விலைக்கு அளிக்கிறார்கள். பின்னர் கோவில்களில் பிரசாதம் அளிக்க பயன்படுத்தப்படும் தொன்னையை 4000 என்ற எண்ணிக்கையில் வாங்கி வர வேண்டும். தொன்னைகளில் மக்கிய எருவை நிரப்பி விதையிட்டு சிறு அளவில் நீர் வார்த்து வர வேண்டும். ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் விதைகள் முளை விடும். அவற்றை மக்களிடம் அளித்து அப்படியே தொன்னையுடன் வீட்டுத் தோட்டத்தில் நடச் சொல்ல வேண்டும். 

இதில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இணைக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் செழித்து வளர்கின்றன. ஒரு நாளைக் கொண்டாட உள்ள சிறப்பான வழிகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றியது. 

என் நண்பனின் வாழ்க்கை என்றும் இறைமையின் ஆசியாலும் சுற்றம் நட்பின் பிரியத்தாலும் சூழப்பட்ட இனிமையான ஒன்றாக அமைய வேண்டும் என இத்தருணத்தில் அவனை வாழ்த்துகிறேன். 


வாழ்க ! செழித்து வளர்க !!