Thursday 13 July 2023

மக்கள் கல்வி

 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு பல ஆயிரம் கோடி தொகை ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்படுகிறது. தமிழ்நாடு கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பரவலாக்கப்பட்ட மாநிலம். கல்வி பரலாக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கணிசமான அளவில் இங்கே இருக்கவே செய்கிறது. அதன் பொருள் என்னவெனில் இப்போது உள்ள கல்விமுறை ஏழைகள் பொருளியல் நலன்கள் பெற போதுமானதாக இல்லை என்பதே ஆகும். 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஏன் பாதுகாப்பாக தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தரக் கூடாது ? தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தருபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டால் கூட அவர்களுக்கும் பொருளியல் பலன் இருக்கும். தென்னை மரம் பனை மரம் ஏற பயிற்சி பெறும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தென்னை மரம் பனை மரம் ஏறுவதை தங்கள் உப தொழிலாக மேற்கொள்ள முடியும். இங்கே காவிரி டெல்டா கிராமங்களில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கே ஆட்கள் இல்லை. எனவே புதிதாக தென்னை பயிரிடவே விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்படுகிறது. வயது குறைவான மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்குமெனில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விருப்பத்தின் பேரில் விவசாயத்துறை மூலம் பயிற்சி அளிப்பதில் தடை ஏதும் இல்லை. ஒரு கிராமத்தில் ஆயிரம் தென்னை மரம் இருக்கிறதென்றால் ஒரு மரம் ஏற ரூ. 20 என நிர்ணயம் செய்தால் கூட ஒருவர் மாதம் ரூ. 20,000 பொருளீட்ட முடியும். ( ஒரு தென்னை மரம் ஏற இப்போது ரூ. 50 லிருந்து ரூ. 100 வரை கட்டணமாகக் கேட்கப்படுகிறது. அப்படி இருந்தும் மரம் ஏற ஆட்கள் இல்லை ). தேங்காய் பறிக்க மட்டுமல்லாமல் தென்னையின் உச்சியில் உள்ள மட்டை பாளை இவற்றை ஒழுங்குபடுத்த கூட மரம் ஏற வேண்டியிருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி தரும் போது தென்னைக்கு ஏற்படக்கூடிய நோய்கள் அவற்றுக்கு சரி செய்யும் மருந்துகள் ரசாயணங்கள் ஆகியவை குறித்த அறிமுகத்தையும் அவர்களுக்கு அளிக்கலாம். மரம் ஏறுவதற்கு பயிற்சி தருவதைப் போல கீற்று முடையவும் பயிற்சி தரலாம். மூங்கில் கழிகளை வெட்டுவதற்கு பயிற்சி, மூங்கில் கூடை பின்ன பயிற்சி ஆகியவையும் தரப்படலாம். 

பொருளியல் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ கற்றுக் கொள்ளும் ஒரு கல்வி அல்லது பெறும் ஒரு பயிற்சி அவருக்கு ஏதோ ஒரு வகையில் பொருளீட்ட உதவும் எனில் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

பொதுவாக இந்த தளத்தில் நான் குறிப்பிடும் விபரங்கள் மிகக் குறைந்தபட்சமான விபரங்களே. உதாரணத்துக்கு காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் சராசரியாக 2500 லிருந்து 3000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். எனினும் நான் குறைந்தபட்சமாக 1000 தென்னை மரங்கள் என்றே எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

3000 தென்னை மரம் ஏற மரத்துக்கு ரூ. 20 எனில் பராமரிப்புக்காக ஒருமுறையும் காய் பறிக்க ஒரு முறையும் ஏறினால் ஒருவருக்கு மாதம் ரூ. 1,20,000 கிடைக்கக்கூடும். ஒரு கிராமத்தில் நான்கு பேர் மரம் ஏறும் தொழில் செய்தால் ஒருவருக்கு ரூ. 30,000 கிடைக்கும். நான்கு குடும்பங்கள் பொருளியல் மேம்பாடு அடையும். 

இப்போது நடப்பது என்னவெனில் தேங்காய் வியாபாரிகள் தென்னந்தோப்புகளுக்குச் சென்று தாங்களே ஆள் கொண்டு வந்து தேங்காய் பறித்துக் கொள்கிறோம் என்று கூறி காய்களை பறித்துக் கொள்கிறார்கள். ஒரு தேங்காய்க்கு ரூ. 3 அல்லது ரூ. 4 என விலை நிர்ணயயிப்பார்கள். தேங்காய் பறிக்கும் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் ஒரு காய் பறிக்க ரூ. 2 என அமர்த்தி காய்களை பறித்துச் செல்வார்கள். கடைவீதியில் ஒரு தேங்காய் ரூ. 15 லிருந்து ரூ. 20 வரை விற்பனை செய்யப்படும்.