Sunday 9 July 2023

நீர் வார்த்தல்

 

இன்று காலை நண்பர்களுடன் சென்று ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் 09.07.2021 அன்று வெட்டப்பட்ட 14 மரங்களுக்கு பிழையீடாக நடப்பட்ட 100 மரக்கன்றுகளுக்கு நீர்வார்க்கப்பட்டது. நடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதால் மரக்கன்றுகள் என்ற நிலையிலிருந்து மரங்கள் எனக் கூறத்தக்க நிலைக்கு அவை வளர்ந்துள்ளன. 2021 ஜூலை 30ம் தேதி அவை நடப்பட்டன. 14 மரங்கள் வெட்டப்பட்ட அதே வீதியில் அந்த மாதத்திலேயே நூறு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என நான் உறுதியாயிருந்தேன். எண்ணியவாறே நிகழ்ந்தது. அந்த வீதியில் வசித்த மக்களுக்கு ம்ரங்களை வெட்டியவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 மரங்கள் நடக்கூடாது என்ற நெருக்கடியை அளித்தனர். மக்கள் ஒற்றுமையின் மூலம் அந்த நெருக்கடிகள் அனைத்தும் செயலிழந்து போயின. 

அனைத்து மரங்களும் 10 அடி உயரம் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. அந்த பகுதியின் வழியாகச் செல்லும் போது அவ்வப்போது அந்த மரங்களைச் சென்று பார்ப்பேன். பசுமையாக அவை வளர்ந்திருப்பதைக் காணும் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும். 

காவிரி வடிநில பருவநிலையில் ஜூலை என்பது மழைக்காலத்தின் தொடக்கம். சரியாகச் சொன்னால் , வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர் முதல் வாரமே இங்கே மழைக்காலத் துவக்கம். எனினும் தென்மேற்கு பருவ மழையாலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மழை கிடைப்பதுண்டு. 100 மரக்கன்றுகளும் ஒரு மழைக்காலத் துவக்கத்தில் நடப்பட்டன. அவற்றின் வளர்ச்சியில் முதல் ஆறு மாதங்கள் என்பது மழைக்காலம். பின்னர் ஒரு கோடையைக் கடந்தன. அதன் பின் இன்னொரு மழைக்காலம். மீண்டும் ஒரு கோடை. இப்போது மூன்றாவது மழைக்காலத்தை எதிர்கொண்டுள்ளன. அடுத்த 5 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் அவற்றுக்கு கிடைக்கும். இந்த பருவத்தில் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வீதியில் வசிக்கும் மக்களும் மரங்களின் வளர்ச்சியில் போதிய அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.