Friday 14 July 2023

தென்னைத் தொழில் - தென்னைப் பணி ( சிறு பிரசுரம்)

 காவிரி போற்றுதும்

மயிலாடுதுறை 

***

தென்னைத் தொழில் - தென்னைப் பணி

----------------------------------------------------------------------


மதிப்பிற்குரிய விவசாயிகளுக்கு,

வணக்கம். 

இந்தியர்களின் வாழ்வில் தென்னைமரம் என்பது உணர்வுபூர்வமான ஆழமான தொடர்பைக் கொண்ட உயிராகும். தேங்காய் நமது உணவுமுறையில் கணிசமான பங்கை வகிக்கிறது. நமது வழிபாட்டில் தேங்காய் மிகப் பிரதானமான இடம் கொண்டிருக்கிறது. கேரளத்தில் இன்றும் ஒரு வழிபாட்டு முறை ஒன்று உண்டு. இராமாயணம் வாசிக்கத் தொடங்கும் போது முற்றிய தேங்காய்களை தரையில் அடுக்கி அதன் மீது மண் போட்டு மூடி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் இராமாயணம் பாராயணம் செய்யும் போது நீர் வார்ப்பார்கள். நாற்பது நாட்கள் பாராயணம் நிறைவு பெற்று ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் நிகழும் போது தென்னை முளைத்திருக்கும். அந்த தென்னம்பிள்ளைகளை ஊரில் இருப்பவர்களுக்கு தானமாக அளிப்பார்கள்.  இருக்கும் இடத்திலெல்லாம் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் அளிக்கக்கூடியது தென்னை என்பது அவர்களுடைய நம்பிக்கை. 

நமது மாவட்டத்தின் கிராமங்களில் ஒரு கிராமத்தில் சராசரியாக 1000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். வீட்டுக்கு இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன என எடுத்துக் கொண்டால் கூட ஆயிரம் மரங்கள் இருக்கும் . மேலும் விவசாயிகளின் தென்னந்தோப்புகளை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். எனினும் ஒரு கணக்கீட்டுக்காக குறைந்தபட்சமாக 1000 மரங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். 

நமது கிராமங்களில் இப்போது தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேங்காய் பறிப்பதிலும் அதனை விற்பனை செய்வதிலும் விவசாயிகளுக்கு பல இடர்கள் ஏற்படுகின்றன. 

கிராமங்களில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் கிராமத்துக்கு பத்து பேர் என்ற அளவில் இருப்பார்களேயானால் அவர்களுக்கு தென்னை மரம் ஏறுதல் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கும் சகாய கட்டணத்தில் தேங்காய் பறிக்கவும் நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு உண்டாகும். 

மத்திய அரசின் ‘’திறன் மேம்பாட்டுப் பயிற்சி’’ தென்னை மரம் ஏறுவதற்கு அளிக்கப்படுகிறது. ஒரு வார காலம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. தங்குமிடம் உணவு ஆகியவை பயிற்சியாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும். பயிற்சி முழுமையாக நிறைவு பெற்ற பின் தென்னை மரம் எளிதாக் ஏற உதவும் கருவியும் கட்டணமின்றி வழங்கப்படும். 

தென்னை மரம் ஏறுதலை தொழிலாகவோ உப தொழிலாகவோ கொள்வதன் மூலம் மாதாமாதம் கணிசமான வருவாய் பெற முடியும். இளைஞர்கள், சிறு குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் இது ஒரு நல்வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அன்புடன்,

அமைப்பாளர்

காவிரி போற்றுதும்

தொடர்பு எண் : **********