Tuesday 18 July 2023

சகஜ நிலை

 யோக தியான வகுப்புகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது எனில் முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு சகஜமான மனநிலையை உருவாக்கும் விதமாக அந்த மூன்று நாள் வகுப்புகளையும் வடிவமைத்திருப்பார்கள். தொழில்நுட்ப உலகம் விரிவாக விரிவாக தனிமனிதன் அகம் தான் பழகிய குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே சகஜமாக இருக்கிறது. புதிதாக ஒன்றைப் பழகுகையில் முரண்டு பிடிக்கிறது. அந்த முரண்டு பிடிக்கும் மனநிலை எதையும் முழுமையாகப் பயிலவோ பயிற்சி செய்யவோ முற்றாக அனுமதிக்காது. எனவே முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களின் மனநிலையை சகஜமாக்குவார்கள். அதன் பின் அங்கே பயிலல் இயல்பாக நிகழும். 

‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் மேற்கொண்ட எந்த முன்னெடுப்புக்கும் மிக நல்ல ஆதரவு எப்போதும் மக்களால் அளிக்கப்பட்டது. மக்கள் அனைவருமே நமது முன்னெடுப்புகளை வரவேற்றார்கள். 

(1) செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறினோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டன. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமங்களின் பட்டியலில் முதலிடம் வகித்தது. 

(2) அவர்கள் நமது அழைப்பை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மலர்ச்செடி கன்றை அளித்தோம். அவற்றை அவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டனர். 

(3) ஒரு குடியரசு தினத்தன்று முதல் தினம் அந்த ஊரின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்றை அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதனை நடுமாறு கேட்டுக் கொண்டோம். மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். கிராம மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக நாம் இவற்றை முன்வைத்தோம். இரண்டு நிகழ்வுகளிலும் கிராம மக்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

(4) விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு பொருளியல் பலன்கள் பெற வேண்டும் என்ற நம் விருப்பத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கிறோம். 

(5) மழை தொடர்ந்து பெய்யும் போது கிராமத்தின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏழு நாட்கள் தினம் மாலை வேளையில் உணவு தயாரித்து அளித்தோம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை அளித்தோம். குடிசை வீடுகளில் மழைக்காலம் என்பது சற்றே அசௌகர்யமான காலம். அந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆற்றும் பணி என்பது அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை சமூகத்தின் மீது அளிக்கிறது. 

(6) தொடர்ந்து பல்வேறு விதமான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். 

(7) சென்ற ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக எல்லா வீடுகளுக்கும் காய்கறி விதைகளை வழங்கினோம்.

(8) இந்த ஆண்டு காய்கறி நாற்றுக்களை உருவாக்கி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

இந்த செயல்கள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் அனைவருக்குமான அமைப்பாக கிராமத்தில் உள்ளது. நமது செயல்களில் நாம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கிராமத்தின் மக்களையும் இணைத்திருக்கிறோம். நமக்கு அளிக்கப்படும் ஆதரவும் நம் மீது காட்டப்படும் பிரியமும் கிராமத்தின் சகஜ நிலை என்று கொள்ள முடியும்.