Sunday 10 September 2023

கம்பன் ஊர்

 நண்பன் கே. எஸ் தனது உறவினர்களுடன் மயிலாடுதுறையில் ஒரு திருமண வரவேற்புக்கு நேற்று வருகை புரிந்தான். சிதம்பரத்தில் இருந்து புறப்படும் போது எனக்கு ஃபோன் செய்தான். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அளித்தது போக கூடுதலாக 1 மணி நேரம் இருந்தால் உன்னை ஒரு முக்கியமான ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். அவன் ஒத்துக் கொண்டான். 

நாங்கள் இருவரும் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவழுந்தூருக்குச் சென்றோம். கம்பன் பிறந்த ஊர். 108 திவ்யதேசங்களில் 10 வது திவ்யதேசமானது இந்த ஊர். பெருமாளின் பெயர் தேவாதிராஜன். நின்ற திருக்கோலம். பெருமாளின் மார்பில் திருமகள். கருவறையில் பெருமாளுடன் மார்க்கண்டேயர், கருடன், காவிரித் தாயார், பிரகலாதன் ஆகியோர் உள்ளனர். பெருமாள் பிரகலாதனுக்கு அருள் கொடுத்த தலம். கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கம்பர் ‘’இரணியன் வதைப் படலம்’’ என ஒரு படலத்தை இயற்றியிருப்பார். அதில் எழுதப்பட்டிருக்கும் பிரகலாதன் குறித்த வரிகள் மகத்தானவை. வாசிக்கும் எவர் கண்ணிலும் நீர் மல்கச் செய்பவை. 

உற்சவரின் பெயர் கோசஹன். ஆமருவியப்பன். 

நண்பனுக்கு இத்தனை பெரிய கோவிலும் இத்தனை பெரிய பெருமாளும் ஆச்சர்யம் தந்தது. அவன் கம்பன் மீது பெரும் பித்து கொண்டவன். அங்கே இருந்த கம்பர் சன்னிதியில் கம்பரை வணங்கினான்.