Friday 8 September 2023

நடுநாட்டில்

 வைணவ மரபில் திருவஹிந்த்ரபுரத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை நடுநாடு என்று சொல்வார்கள். நடுநாட்டில் அமையப் பெற்றுள்ள திவ்யதேசங்கள் இரண்டு. திருவஹிந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். 

நண்பன் கே. எஸ் சின் விடுமுறை முடிவடைய உள்ளது. சென்ற வாரத்தில் இரண்டு பயணங்கள் நிகழ்த்தியிருந்த நிலையில் முத்தாய்ப்பாக ஒரு மூன்றாவது பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்று அவனிடம் சொன்னேன். அடுத்தடுத்த பயணங்களால் நண்பனின் உடல் சற்று சோர்ந்திருக்கிறது. எனக்கு நீண்ட தூரம் பயணம் செய்தால் உடலும் மனமும் உற்சாகம் கொண்டுவிடும். மோட்டார்சைக்கிளில் நீண்ட தூரம் பயணித்திருப்பதால் பயணம் துவங்கிய சில நிமிடங்களில் மனநிலை உற்சாகத்துக்குச் சென்று விடும். அதன் பின்னர் அந்த உற்சாகமே அலை போல நாள் முழுதும் கொண்டு சென்று விடும். 

சென்ற இரண்டு பயணங்களும் புறப்பட காலை 9 மணி ஆனது. எனவே இந்த பயணத்தை காலை 6 மணிக்குத் துவக்கிட வேண்டும் என்று சொன்னேன். அதிகாலை 6 மணிக்கா என்றான் கே.எஸ். கொஞ்சம் யோசித்து காலை 7.30 என்றான். நேற்றிரவு நேரத்தை உறுதி செய்து கொண்டோம். அதிகாலையில் அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு முன்னரே விழிப்பு வந்து விட்டது. குளித்துத் தயாரானேன். வெளியூர் சென்றால் பெரும்பாலும் எனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு செல்வேன். வீட்டில் இருப்பவர்களுக்கு நான் வீட்டில் இருப்பது போலவே தோன்றும் என்பதால். 

காலைப் பேருந்தைப் பிடித்து சிதம்பரம் சென்று சேர்ந்தேன். பொதுமக்கள் போக்குவரத்தை நான் மிகவும் விரும்புவேன். பலவிதமான மக்களைக் காண முடியும். உரையாட முடியும். பேருந்து நிலையத்தில் சில நிமிடங்கள் காத்திருந்தேன். நண்பன் வந்து என்னை அழைத்துக் கொண்டான். 

புவனகிரி குறிஞ்சிப்பாடி வழியாக வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றோம். கிருஷ்ணன் வேணுகோபாலனாக குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். திருப்புல்லாணி ஆலயம் போல இங்கும் ஸ்ரீராமபிரான் சயனத்திருக்கோலத்தில் இருக்கிறான். ஒரு குழந்தையைப் போல ஸ்ரீராமன் உறங்குவதாகத் தோன்றியது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். 50 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் மண்டபம் ஆலயத்தின் எதிரில் அமைந்திருந்தது. அங்கே பெருமாளை சேவித்து விட்டு கோலியனூர் புறப்பட்டோம். 

திருநறுங்குன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் சந்தித்த தம்பதி கோலியனூர் சமண ஆலயம் குறித்து கூறியிருந்தார்கள். அந்த ஆலயத்துக்குச் சென்றோம். ஆதிநாதர் முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அந்த ஆலயத்தின் அர்ச்சகர் அருக நெறி எவ்விதம் அன்றாட வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக விளங்கக் கூடியது என்பதை விளக்கினார். அருகர் நிழலில் சில நாட்கள் தங்கியிருக்குமாறு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அவ்விதம் அழைத்தது பேருவகை அளித்தது. ஒரு சில வாரங்களில் வருவதாகக் கூறினேன். 

அங்கிருந்து திண்டிவனம் சென்று மேல்சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ‘’ஜின காஞ்சி மடம்’’ என்னும் மடத்துக்குச் சென்றோம். தமிழ்நாட்டின் முக்கியமான சமண மடம் ‘’ஜின காஞ்சி மடம்’’. அங்கே ஆதிநாதர் ஆலயமும் உள்ளது. அங்கே ‘’சமணப் பண்பாடு’’ என்ற நூலை அளித்தார்கள். அங்கிருந்து அருகில் சில கிலோ மீட்டரில் இருந்த ‘’விழுக்கம்’’ என்ற ஊருக்குச் சென்றோம். அங்கும் ஒரு சமண ஆலயம். 

மதியம் 2 மணி அளவில் புறப்பட்டோம். விக்கிரவாண்டியில் மதிய உணவு. நான்கு மணி அளவில் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். 

ஒரு பேருந்தைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அமர நல் இருக்கை ஒன்று எனக்கு வாய்த்தது. 

கட்டுமானப் பணியிடத்தின் மேஸ்திரிக்கு ஊர் வந்ததும் ஃபோன் செய்தேன். என்னை பிக் அப் செய்து கட்டுமானப் பணியிடத்துக்கு அழைத்துச் சென்றார். இன்று பணியிடத்தில் மூன்று பேர் தான் பணி புரிந்திருந்தனர். மேசன் ஒருவர் . பணியாளர் இருவர். ரூஃப் மட்டத்துக்கு மீதமிருந்த கட்டு வேலையை செய்து முடித்திருந்தனர். முன்னர் கட்டிய சுவர்களுக்கு தண்ணீர் பிடித்தனர். வேலை முடியும் வரை கட்டுமானப் பணியிடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருந்தேன்.  ககன், புவன், மங்கள் , சநு வுக்கு பிஸ்கட் போட்டேன்.  மேசன் என்னை வீட்டில் டிராப் செய்து விட்டு சென்றார். 

தொழில் நிமித்தம் இரண்டு பேரை சந்திக்க வேண்டியிருந்தது. ஒருவர் உள்ளூர்வாசி. இன்னொருவர் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருப்பவர். இருவரையும் சந்தித்தேன். வீடு திரும்ப இரவு 10 மணி ஆகியது. 

பயணத்தைக் காலையிலேயே துவக்கியதால் இத்தனை இடங்களுக்கும் சென்று விட்டு ஊர் திரும்பி மீண்டும் வெளியூரில் இருக்கும் ஒருவரை சந்திக்க முடிந்தது என எண்ணிக் கொண்டேன்.