Monday 4 September 2023

என்ன செய்திருக்கிறோம் நாம் ?

 ’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுத்த செயல்கள் எதிர்பார்த்த பலன்களைக் கொடுத்திருக்கிறதா என்ற கேள்வி அதன் அமைப்பாளராக என் மனத்தில் எழும். ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். இப்போது நாம் செயல்புரியும் கிராமத்தில் சில விவசாயிகள் நம் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள். மேலும் பலரை நம் பணிகளும் ஆலோசனைகளும் சென்றடைந்து அவர்கள் பலன் பெற வேண்டும் என்பதே நம் விருப்பம். 

14 மாதங்கள் முன்பு ஒரு விவசாயி தனது 3 ஏக்கர் நிலத்தில் நம் ஆலோசனையின் பேரில் 1000 தேக்கு மரக்கன்றுகளை நடவு செய்தார். இன்று அவை 15 அடி உயரத்தை எட்டியுள்ளன. சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. எந்த வளைவும் இன்றி பிசிறும் இன்றி நேராக வளர்ந்துள்ளன. அவ்வாறு அவை வளர்வதை கவனம் கொடுத்து உறுதி செய்தோம். இன்னும் 14 ஆண்டுகளில் ஒவ்வொரு மரமும் ரூ. 1.00.000 விலை போகும். இந்த விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. 

அந்த விவசாயி பயன் பெற்றது போல கிராமத்தின் எல்லா விவசாயிக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு ; விருப்பம். 

நேற்று நண்பன் கே. எஸ் உடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஒரு ஐ.டி நிறுவனம் நடத்துகிறார். அவரது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். செயல் புரியும் கிராமத்தில் அவருக்கு சில ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிட வேண்டும் என்று கூறினார். நான் உடனிருந்து எல்லா பணிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். 

நம் மீது அவர் காட்டும் பிரியமும் மரியாதையும் மிகப் பெரியது. அந்த அன்பே மீண்டும் மீண்டும் மேலும் உத்வேகத்துடன் செயல் நோக்கி செல்வதற்கான ஆர்வத்தை அளிக்கிறது. 

என்ன செய்திருக்கிறோம் நாம் என்ற கேள்விக்கான விடையாக அமைகிறது.