Tuesday 17 October 2023

வன மார்க்கம்

இந்திய நாட்டின் பேராலயங்களின் சிற்பங்களை நாம் காணும் போது நம்மால் ஒரு விஷயத்தை உணர முடியும். அவை கல்லில் சிற்பமாக வடிவம் பெறும் முன் சொல்லில் எழுந்துள்ளன என்பதை அறியலாம். கவிஞனின் சொல்லே கல்லில் சிற்பமாக எழுகிறது. இந்திய சிற்பவியலுக்கு அடிப்படையாக இந்தியாவின் புராணங்களும் இதிகாசங்களும் உள்ளன. அதாவது சிற்பவியல் கற்கும் எவரும் முதலில் இந்தியப் புராணங்களையும் இதிகாசங்களையும் கற்க வேண்டும். 

இராமாயணம் ‘’ஆதி காவியம்’’ எனப்படுகிறது. மகாபாரதம் நிகழ்ந்த காலத்திலேயே இராமாயணக் கதை பாடகர்களால் தொடர்ந்து பாடப்பட்டிருக்கிறது. பீமனுக்கு அனுமன் இராமயணக் கதையை சொல்வது போல் மகாபாரதத்தில் ஒரு பகுதி வரும். அதனைக் கொண்டு மகாபாரதம் இராமாயணத்தையும் உள்ளடிக்கியது என்பதைக் காணலாம். 

உலகின் முதல் காவியமான இராமாயணம் இயற்றப்பட்ட நாள் முதல் உலகெங்கும் பரவிய வண்ணம் உள்ளது. பெரும்பாலான இந்திய மொழிகளில் கவிஞர்களால் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. அவை அந்தத்த மொழிகளில் செவ்விலக்கியமாக நிலைபெற்றுள்ளன. தமிழின் கம்பராமாயணம் ஒரு எடுத்துக்காட்டு. துஞ்சத்து எழுத்தச்சனின் ‘’அத்யாத்ம ராமாயணம்’’ மலையாள மொழியின் முதல் இலக்கியமாகவும் அமைந்துள்ளது. 

இந்திய நிலப்பகுதிகள் மலைகள் நதிகள் குறித்த குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. பிரயாகை, சித்ரகூடம், தண்டகாரண்யம், கிஷ்கிந்தை, கோதாவரி நதி, சேது சமுத்திரம் ஆகியவை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக மானிட சமூகங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் பகுதிகள் அவை. 

வங்க எழுத்தாளர் ‘’சீர்ஷேந்து மகோபாத்யாய’’ ராமன் வனவாசம் சென்ற பாதையில் பயணிக்க விரும்பி வங்காளத்திலிருந்து அயோத்தி வந்தடைகிறார். அவர் வங்க மொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை வாசித்திருக்கிறார். அயோத்தி வந்தடைந்த போது அயோத்தியில் குழுமும் ஆயிரக்கணக்கான மக்கள் ‘’சீதாராம் சீதாராம்’’ என உணர்ச்சிகரமாக முழங்கிக் கொண்டிருப்பதைக் காண்பது அவருக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கிறது. துளசிதாசரின் ‘’ராம் சரித மானஸ்’’ நாட்டின் சாமானிய மக்களின் அகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்கிறார். ராமர், ராமாயணம் குறித்த நினைவுகளுடன் சிந்தனைகளுடன் பிரயாகை, சிருங்கிபேரம், சித்ரகூடம் ஆகிய ஊர்களுக்கு வந்து சேர்கிறார். அயோத்தியிலிருந்து சித்ரகூடம் வரை பயணித்த அனுபவத்தை ‘’ராமன் வனவாசம் போன வழி : ஒரு தேடல்’’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார். 

நூல் : ராமன் வனவாசம் போன வழி : ஒரு தேடல் ஆசிரியர் : சீர்ஷேந்து முகோபாத்யாய மொழியாக்கம் : தி. அ. ஸ்ரீனிவாசன் விலை : ரூ. 130 பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்