Wednesday 18 October 2023

நூதனம்

 லௌகிக வாழ்க்கையின் தன்மைகளில் ஒன்று நூதனம். அந்த நூதனம் பல சமயம் ஹாஸ்யமாக வெளிப்படுவதுண்டு. கலைஞனுக்கு எப்போதும் லௌகிகம் மேல் ஒரு மென்புன்னகை ஒன்று உண்டு. தி.ஜானகிராமன் போன்ற மகா கலைஞனுக்கு அது மேலும் கூடுதலாகவே இருந்திருக்கும். வீட்டின் பாதுகாப்பை பல கட்டங்களில் உறுதி செய்யும் ஒருவர் ரயிலுக்கு மாட்டுவண்டியில் புறப்பட்டுப் போகும் போது கைக்குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு ரயில் நிலையம் செல்லும் வழியில் பாதி தூரத்தில் ஞாபகம் வந்து மீண்டும் வீட்டுக்கு வந்து மதிய ரயிலுக்குப் போக முடியாமல் சாயந்திர ரயிலில் செல்ல நேர்வது ; மாநகரப் பேருந்து ஒன்றில் சாராயம் குடித்த ஒருவன் சாராய போதையில் பத்து வருடம் முன்பு இறந்து போன தன் அன்னை குறித்து பிலாக்கணம் வைப்பது ; வணிகம் நொடித்துப் போன செட்டியார் ஒருவர் தனது உறவினரின் உதவியால் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெற்றிகரமான வணிகராக எழுவது , இந்திய அரசியல்வாதி ஒருவருக்கும் வெளிநாடு ஒன்றின் துணை அதிபருக்கும் விமானத்தில் நடக்கும் சந்திப்பு என சுவாரசியமான பல விஷயங்களை தனது பாணியில் பதிவு செய்கிறார் தி.ஜா , தனக்கே உரிய மென்மையான புன்னகையுடன். 

நூல் : அபூர்வ மனிதர்கள் (வாழ்வியல் சித்திரங்கள்) ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : ரூ. 125 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்.