Sunday 26 November 2023

மூர்க்கர்களும் எளிய மக்களும்

 தமிழில் ஒரு பழமொழி  உண்டு. ‘’மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’’ என்று. 

மூர்க்கத்தனம் என்பது மனிதர்கள் உருவான காலத்தில் அவர்களிடம் இருந்த குணம். பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் அந்த குணத்தை மட்டுப்படுத்தி மட்டுப்படுத்தி வந்திருக்கின்றனர். எனினும் மனித உடலில் மனித மூளையில் இன்னும் மிகச் சிறு அளவில் அது இருக்கவே செய்கிறது. முன்னர் அது சக மனிதனைத் தாக்கி கொன்று அதில் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. பின்னர் தன்னைக் கண்டு தன் மூர்க்கத்தனம் கண்டு பிற மனிதர்கள் கொள்ளும் அச்சத்தால் மகிழ்ச்சி கொள்வதாக இருந்தது. இவ்வாறான தன்மை கொண்ட மனிதர்கள் சமூகங்கள் உருவாகி வந்த போது தண்டனைகளால் கட்டுப்படுத்தப்பட்டார்கள். மூர்க்கத்தனத்தின் வரையறையும் காலத்துக்குத் தகுந்தாற் போல மாறிக் கொண்டிருக்கிறது.  

ஆதிமனிதனிடம் சக மனிதனைத் தாக்கி மகிழும் இயல்பே மூர்க்கம் என இருந்தது. இப்போது உள்ள மூர்க்கர்கள் பிறரை எந்தெந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்த இயலுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் துன்புறுத்துகிறார்கள். அவ்வாறான செயலில் ஈடுபடும் போது அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். பொதுவாக மூர்க்கர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டு என நாம் நினைப்போம். அப்படி அல்ல ; மூர்க்கத்தில் முழுமையாக திளைப்பவர்கள் நுட்பமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பவர்களை விடவும் அதிநுட்பமாக சிந்திப்பார்கள். புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்க்கத்தனம் என்னும் இயல்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

அவர் மனம் எவ்விதம் செயல்பட்டது என்பதை படிப்படியாகக் காண்போம். 

(1) புராதானமான விஷ்ணு ஆலயம் இருக்கும் சன்னிதித் தெருவில் பத்து ஆண்டு அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய பெருமரங்கள் 14 இருந்தன. ஊராட்சி மன்றத் தலைவர் செங்கல் காலவாய் வைத்திருக்கிறார். அதற்கு எரிபொருள் தேவைப்பட்டது. அவரிடம் ஜே.சி.பி வாகனம் சொந்தமாக இருந்தது. டிராக்டர் மற்றும் டிப்பர் இருந்தது. ஊராட்சி மன்ற வாகனத்தையும் பயன்படுத்திக் கொண்டார். ஊராட்சி பணியாளர்களைகளையும் மரம் வெட்டுவதில் பயன்படுத்தினார். வெட்டிய மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு கொண்டு சென்றார்.

(2) அந்த மரங்களை வெட்ட அவர் தேர்ந்தெடுத்த நாளும் நேரமும் நுட்பமானது. அந்த வீதியின் ஆண்கள் அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நேரம். மரம் வெட்டுவதை பெண்கள் எதிர்ப்பதை அவர் அகங்காரம் ஏற்கவில்லை. ‘’என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது ; பெண்கள் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது ; அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள் ‘’ என்று அவர்களிடம் சத்தம் போட்டிருக்கிறார். 

(3) இந்த விஷயம் புகாராக மாவட்ட நிர்வாகத்துக்குப் போனது. அதனை ஒன்றும் இல்லாமல் செய்ய பலவிதங்களில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டது. குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் குறைந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என அனைவரும் குற்றச் செயல் புரிந்தவருக்கு குற்றத்தை மறைக்க உதவியிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மேலும் நடவடிக்கை தேவை என்ற புகார் மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் மனு நிலுவையில் இருக்கிறது. 

(4) இப்போது இந்த விஷயம் குற்றம் இழைத்த ஒருவர் தொடர்பான விஷயமாக மட்டும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் என பலர் சம்பந்தப்பட்டதாக மாறியதால் அவர்கள் இந்த விஷயத்தை வீதிவாசிகளிடம் பேசி சுமுகமாகப் பேசி தீர்க்குமாறு அழுத்தம் தந்தார்கள். பலரது அழுத்தம் இருந்ததால் சந்நிதித் தெரு விஷயத்தை ஆறப் போட்டார் ஊராட்சி மன்றத் தலைவர். இந்த விஷயம் குறித்து புகார் எழுப்பப்பட்ட பலர் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர். புதியவர்கள் அந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். புதிதாக வந்தவர்கள் கோப்பினைப் பார்க்கும் போது முன்னர் இருந்தவர்கள் என்னென்ன முறைகேடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து இந்த விஷயம் சிக்கலானது என்பதாலும் நீதிமன்றம் செல்ல உள்ளது என்பதாலும் குற்றம் இழைத்தவருக்கோ குற்றம் இழைத்தவருக்கு துணை நின்றவர்களுக்கோ எவ்விதத்திலாவது உதவுவது தங்களுக்கு தீராத சிக்கலை உண்டாக்கி விடும் என்பதால் இந்த விஷயத்திலிருந்து பெருந்தூரம் விலகி இருக்கிறார்கள். 

(5) 14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயம் தொடர்பான கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு அளிக்கப்படவில்லை. மாநில தகவல் ஆணையம் வழக்கு பதிவு செய்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் விசாரணை நிகழும். 

(6) சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் சாமானிய பொருளியல் பின்னணி கொண்ட சாமானியர்கள். அவர்களால் தான் இத்தகைய அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதை ஊராட்சி மன்றத் தலைவரால் ஏற்க முடியவில்லை. 

(7) இந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்துக்குப் பின்னும் அந்த ஊரில் அவர் பல மரங்களை வெட்டியிருக்கிறார். அவர் மரம் வெட்டுவதை குறைத்துக் கொள்ளவோ நிறுத்தவோ இல்லை. 

(8) பத்து மாதம் முன்பு அதே தெருவில் ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்தார். மாவட்ட நிர்வாகம் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு முயற்சி தடுக்கப்பட்டது. 

(9) விஷ்ணு ஆலயம் அருகே இருக்கும் ஆலயத்தை இடிப்பது அந்த வீதியில் வசிப்பவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் என்பதால் அரசு கட்டிடம் ஒன்றுக்கு இடம் தேவைப்படுகிறது என்ற தபால் வந்த போது ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை பொருத்தமான இடங்களுக்கான தேர்வு பட்டியலில் வைத்தார். அது தான் ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு துவக்கப்புள்ளி. அந்த இடம் தேர்வாகி விட்டால் அரசு எந்திரத்தைக் கொண்டே ஆலயத்தை இடித்து அங்கிருக்கும் வேப்ப மரங்களை வெட்டி மக்களைத் துன்புறுத்தி மகிழலாம் என்பதாக அவரது எண்ணம் இருந்தது. இருப்பினும் பலரது ஆதரவால் ஆலயமும் வேப்ப மரங்களும் காக்கப்பட்டன. 

(10) விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் வசிப்பவர்கள் எளிய குடிகள். அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இச்செயல்கள் நிகழும் ஊர் என்ன என்பதை குறிப்பிடாமல் இருக்கிறேன். அவர்களுக்கு பலவிதத்திலும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறது. அவற்றை முழுமையாக வெளியிட இது உகந்த காலம் அல்ல என்பதால் அந்த கிராமம் எது என்பதைக் கூறாமல் இருக்கிறேன்.