Thursday 30 November 2023

பயண உரையாடல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் நேற்று ஒரு நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். மொத்த பயண தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு ரயில் பயணம் ; மூன்றில் இரு பங்கு பேருந்து பயணம். அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும்.  அலாரம் வைத்திருந்தார். இருப்பினும் அலாரம் அடிப்பதற்கு அரைமணி முன்னரே விழிப்பு வந்து விட்டது. இரவே வென்னீருக்காக ஹீட்டர் போட்டிருந்தார். எனவே கொதிநீர் தயாராக இருந்தது. குளித்துத் தயாரானார். நேரமிருந்ததால் பைக்கை எடுக்காமல் நடக்கத் தொடங்கினார். 

வெளியூர் சென்றால் தனது இரு சக்கர வாகனத்தை டூ-வீலர் ஸ்டேண்டில் விட்டு விட்டு செல்ல மாட்டார். வீட்டிலேயே விட்டு விடுவார். அவர் ஊரில் இல்லையென்றாலும் வீட்டிலிருப்பவர்கள் அடிக்கடி அவரது டூ-வீலரைப் பார்க்க நேர்வது அவர் இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் என்பதால் இந்த நடவடிக்கை. 

மழைக்காலத்தின் காலை நேரம். காற்று நீர்மை கொண்டு நீராவியாலும் மென்சிறு பனியாலும் நிறைந்திருந்தது. பேருந்து சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளர் கையில் ஒரு வார பத்திரிக்கை இருந்தது. அதனை முன்னட்டை தொடங்கி பின்னட்டை வரை வாசித்து முடித்தார். அவர் வாசித்து முடித்ததும் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் அதனை வாசிக்கக் கேட்டார். அவரிடம் அளித்து விட்டு தன் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் என்று கவனித்தார். ஒரு நடுவயது மனிதர் அமர்ந்திருந்தார். ஜன்னல் ஓர இருக்கையில் அமைப்பாளர். அவருக்கு அருகில் நடுவயது மனிதர். அவர் கையில் வித்யாசமான கயிறு ஒன்றைக் கட்டியிருதார். 

அமைப்பாளர் அவரிடம் ‘’ அண்ணன் ! இந்த கயிறு எந்த கோவிலுக்கு கட்டியிருக்கு ?’’ என்று உரையாடலைத் தொடங்கினார். 

‘’எங்க குலதெய்வத்துக்கு’’

‘’உங்க குலதெய்வம் எந்த சாமி அண்ணன்?’’

‘’முனீஸ்வரன்’’ என்றார் நடுவயது ஆசாமி. 

அமைப்பாளர் ‘’ராம் கிருஷ்ண ஹரி’’ என்று சொன்னார். 

நடுவயது ஆசாமியின் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அவரை அழைத்து வர ஆசாமி செல்கிறார். கல்லூரியில் அழைத்துக் கொண்டு உடனே பஸ் பிடித்து ஊர் திரும்ப வேண்டும். செல்லவும் திரும்பி வரவும் நாள் பொழுது முழுதும் ஆகி விடும். 

சாலையின் இரு பக்கங்களிலும் விவசாயம் செய்யப்படாத நிலப்பரப்பு விரிந்து கிடந்தது. அதனை இருவரும் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். 

அமைப்பாளர் ஆரம்பித்தார். ‘’அண்ணன் ! இஸ்ரேல் ஒரு பாலைவன தேசம் . ஆனா உலகத்துல உள்ள எல்லா விவசாயமும் எல்லா தொழிலும் அங்க நடக்குது.’’

ஆசாமி ’’எல்லா விவசாயமுமா?’’ என்றார். 

’’இஸ்ரேலைச் சுத்தி இருக்கற எட்டு நாடும் அவங்களுக்கு பகை நாடு. இருந்தாலும் அவங்களால கனவுல கூட நினைச்சு பாக்க முடியாத காரியங்களை இஸ்ரேல் சாதிச்சிருக்கு. உணவாப் பயன்படற பல காய்கறிகளை பழங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்யறாங்க’’

ஆசாமி ‘’என்ன ஏற்றுமதியா?’’ என்றார். 

’’ஆமாம் அண்ணன் . இஸ்ரேல பத்தி எப்ப எந்த பேச்சு எழுந்தாலும் அந்த பேச்சுல இஸ்ரேலைப் பத்தி ஒரு ஆச்சர்யம் இல்லாம இருக்காது. விவசாயம் மட்டும் இல்லை. தொழில்லயும் அவங்க ஜெயிண்ட்ஸ். அந்த நாடு பிரஜைகளை டிரெயின் பண்ணுது. எட்டு நாடு பகை நாடுன்னா அவங்க எத்தனை மிலிட்டரி சோல்ஜர்ஸ் ராணுவத்துல வச்சிருக்கணும். ஆனா குறைவான சோல்ஜர்ஸ்தான். அங்க எல்லா ஸ்கூல்லயும் ஸ்டூடண்ட்ஸ்க்கு ராணுவ பயிற்சி உண்டு. ஸ்கூல் படிப்பு முடிச்சவங்க கொஞ்ச நாள் கட்டாயமா ராணுவத்துல வேலை செய்யணும். எட்டு எதிரி நாடுகள்ட்ட இருந்தும் எப்ப வேணாலும் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்ங்கறதால ராணுவ பயிற்சி கொடுக்கப்பட்ட பொதுமக்கள் போர்க்களத்துக்கு போக வேண்டியிருக்கும். இப்ப பயங்கரவாதிகளை எதிர்த்து நடக்கற யுத்தத்துல இஸ்ரேல் பிரதமரோட மகன் தரைப்படை வீரனா யுத்த களத்துல சண்டை போட போயிருக்கான் ‘’

ஆசாமி ‘’இஸ்ரேல் பிரதமர் மகனா?’’ என்று ஆச்சர்யப்பட்டார். 

‘’அவங்களோட திங்கிங் செயல்பாடுகள் எல்லாமே ரொம்ப வித்யாசமானது. உலகத்துல எங்கங்க என்னென்ன தேவை இருக்கோ அந்த தேவையை உற்பத்திப் பொருளா சர்வீஸா செஞ்சு அவங்க எகானமியை ரைஸ் பண்ணுவாங்க. இஸ்ரேல்ட்ட கத்துக்க எல்லா நாடுகளுக்கும் விஷயம் இருக்கு அண்ணன்’’ என்றார் அமைப்பாளர். மேலும் மேலும் என அந்த நாட்டைப் பற்றி பல விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார் அமைப்பாளர்.

‘’இஸ்ரேல் பத்திய இந்த விஷயமெல்லாம் நீங்க சொல்லித்தான் கேள்விப்படறன் ‘’என்றார் ஆசாமி. 

ஆசாமி அமைப்பாளர் குறித்து விசாரித்தார். 

‘’சொந்தமா ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் வச்சிருக்கண்ணன். ஒரு இடத்தை வாங்கி அதுல கட்டிடம் கட்டி சேல் பண்ணிடுவன். அதான் என்னோட பேடர்ண். இது இல்லாம ரியல் எஸ்டேட்டும் உண்டு.’’ 

ஆசாமிக்கு அமைப்பாளர் மீது பெரும் பிரியம் உருவாகி விட்டது. ஆசாமியிடம் அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து விரிவாகச் சொன்னார். 

‘’நம்ம மக்களுக்கு நாம நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தரணும் அண்ணன். நான் கிராம மக்களை நேரடியா சந்திச்சு அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்கறவன். அவங்க உழைக்கத் தயங்கறவங்க இல்லை. அவங்களால கடுமையா உழைக்க முடியும். நம்ம நாட்டுல அப்படி கடுமையான உழைப்பாளிகளா இருந்து பெரும் செல்வந்தர்கள் ஆன சமூகங்கள் இருக்கு. இந்த உலகம் ரொம்ப பெருசு அண்ணன். சில நாடுகள்கிட்ட செல்வம் இருக்கும் .ஆனா அவங்களோட கிளைமேட் அவங்களுக்கு தேவைப்படுற பொருளை உற்பத்தி செஞ்சுக்க முடியாது. உலகத்தோட தேவையை நாம பூர்த்தி செய்யணும் அண்ணன். அப்படி செய்யணும்னு நினைச்சா அதுக்கான முயற்சிகளைப் பண்ணா நம்ம நாட்டுல இருக்கற வறுமையை முழுக்க நீக்கிடலாம் அண்ணன்.’’

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ வறுமையை நீக்க முடியுமா?’’ என்றார். 

‘’நம்ம நாட்ல இருந்து மட்டும் இல்ல உலக அளவில கூட வறுமையை நீக்கிட முடியும். நாம நம்பணும். வறுமை சிலரோட சுயநலத்துக்காக செயற்கையா உருவாக்கப்பட்ட ஒன்னு அது இயற்கையானது இல்ல’’ என்றார் அமைப்பாளர். 

அமைப்பாளர் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஒரு சில விவசாயிகளின் வயல்களில் முழுமையாக தேக்கு நடப்பட்டு அவை நன்றாக வளர்ந்திருப்பதை சொன்னார். 

‘’என்னோட அண்ணன் ஊர்ல எங்க வயல்ல 2000 தேக்கு கன்னு பத்து வருஷம் முன்னாடி நட்டார். இப்ப அந்த மரமெல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. பத்து ஏக்கர்ல ஏழு ஏக்கர் தேக்கு. 3 ஏக்கர்ல நெல் விவசாயம். இப்பவே தேக்கு நல்லா பருத்து இருக்கு. இன்னும் 5 வருஷம் போனதும் கட் பண்ணலாம்னு அண்ணன் பிளான் பண்ணியிருக்கார். குறைஞ்சது இருபது கோடி ரூபாய்க்கு அந்த மரங்கள் விலை போகும். அண்ணன் ஃபீல்டோட ஃபோட்டோ , அண்ணணோட பேட்டி எல்லாம் தினத்தந்தி, தினமலர்ல வந்திருக்கு.’’ என்றார் ஆசாமி. 

அமைப்பாளருக்கு பெரும் சந்தோஷம். தனது சந்தோஷத்தை ஆசாமியிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

ஆசாமி அமைப்பாளரிடம் ‘’ உங்க கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டன். உங்க முயற்சிக்கு விவசாயிகள் நிச்சயம் சப்போர்ட் பண்ணுவாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்’’ என்றார். 

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஆசாமியும் அமைப்பாளரும் பல வருட நண்பர்கள் என்றே எண்ணியிருப்பார்கள். பேருந்து புறப்பட்டதிலிருந்து சேருமிடம் அடைந்தது வரை இருவரும் உற்சாகமாக பேசிக் கொண்டு வந்ததைப் பார்த்தால் அந்த பேருந்து பயணத்தில் சந்தித்துக் கொண்டவர்கள் என எவராலும் சொல்லி விட முடியாது.