Sunday 10 December 2023

நண்பனுக்கு ஒரு யோசனை

மும்பையிலிருந்து வந்திருந்த நண்பன் சுற்றுலாத்துறை சார்ந்து முதலீடு செய்ய விரும்புவதாகவும் கடல் சார்ந்த இடத்தில் ஒரு ''‘ரிசார்ட்’’ அமைத்தால் லாபகரமாக இருக்குமா என்று கேட்டான். என்னிடம் சுற்றுலாத்துறை சார்ந்து முதலீடு செய்ய ஏதேனும் யோசனை உள்ளதா என்று கேட்டான். நேற்று அவன் கேட்டிருந்தது மனதினுள் இருந்தது. இன்று காலை ஒரு யோசனை உதித்தது. 

பழைய தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் தொடங்கி அதிராம்பட்டினம் வரை நீண்ட கடற்கரையைக் கொண்டது. மகேந்திரபள்ளி, பழையார், திருமுல்லைவாயில், பூம்புகார், வாணகிரி, திருக்கடவூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் என கடல் சார்ந்த பல ஊர்களைக் கொண்டது. 

இந்த ஊர்களிலோ அல்லது இந்த ஊர்களிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலோ குறைந்தது 10 ஏக்கர் அளவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் போதுமானது. விலைக்கு வாங்க வேண்டியதில்லை. 

இந்த நிலத்தில் 10 ஏக்கரில் குறைந்தது 2000 சதுர அடி பரப்புள்ள 100 மியாவாக்கி காடுகளை உருவாக்க முடியும். மியாவாக்கி காடுகள் ஜப்பானில் மியாவாக்கி என்பவரால் உருவாக்கப்பட்ட முறையாகும். காடு உருவாக பெரும் பரப்பு தேவை என்ற நிலை இருக்கையில் காட்டில் மரங்கள் வளரும் முறையை அடிப்படையாய்க் கொண்டு குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நட்டு ஒரு காட்டை உருவாக்கும் முறையே மியாவாக்கி முறை ஆகும். 

10 ஏக்கர் நிலத்தில் இவ்வாறு 100 காடுகளை உண்டாக்கி ஒவ்வொரு காடுடனும் ஒரு சிறு குடிலை அமைத்து இணைத்து விடலாம். இந்த நிலப்பரப்பில் அதிக அளவு ஆக்சிஜன் இருக்கும் என்பதால் எவரும் எளிதில் ஒரு மனப்புத்துணர்ச்சியை உணர முடியும். பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலி எப்போதும் நிறைந்திருக்கும் என்பதால் காட்டில் உணரும் அமைதியை உணர முடியும். சமவெளி நிலத்தில் அமைதி அடர்ந்த காடு என்பது பயணிகளை அதனை நோக்கி ஈர்க்கும். 

நிலத்தை குத்தகைக்கு எடுப்பதால் மூலதனச் செலவு கணிசமாகக் குறையும். மியாவாக்கி காடு உருவாக்க மட்டுமே செலவு ஆகும். கட்டிட கட்டுமான செலவு என்பது பெரிதாக இல்லை.  

நண்பனின் பரிசீலனைக்கு இதனை அளிக்கிறேன்.