Friday 15 December 2023

உரையாடல்

 இன்று நானும் எனது நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். நண்பன் நான் வசிக்கும் ஊருக்கு மேற்கே 500 கி.மீ தொலைவில் இருக்கிறான். அவனிடம் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக எனக்குத் தோன்றிய யோசனை ஒன்றை அவனிடம் முன்வைத்தேன். அதாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தினமும் 30 நிமிடம் உரையாடுவது மிகுந்த பயனளிக்கும் என்று கூறினேன். நண்பனும் ஆர்வமாக ஒத்துக் கொண்டான். முதலில் பேசப் போகும் விஷயம் என்ன என்று கேட்டான். ‘’இந்திய அரசியல் சாசனம்’’ என்று சொன்னேன். 

நமது சமூகத்தில் அதிக அளவில் உரையாடல்கள் நிகழ வேண்டும். ஜனநாயகம் என்பது உரையாடலே. 

என்னென்ன விஷயங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்து பேசினோம். நான் ஒரு பட்டியல் அளிக்கிறேன் என்று சொன்னேன். அவனையும் ஒரு பட்டியல் அளிக்குமாறு சொன்னேன். இரண்டிலிருந்தும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். 

இந்திய அரசியல் சாசனம், பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள், சமஸ்கிருத இலக்கியங்கள், பௌத்தம், சமணம், சீக்கியம், இந்தியப் பொருளியல், இந்திய விவசாயம் ஆகியன என்னுடைய முதற்பட்டியல். இந்த உலகில் சூரியனுக்குக் கீழே இருக்கும் அனைத்தையும் குறித்து பேச முடியும். 

நூல் வாசிப்பு ஒருவருக்கு எந்த அளவில் உதவுமோ அதில் 25 சதவீதம் அளவுக்கு உரையாடல்கள் உதவும். இது ஒரு வாசகனின் கூற்று. 

ஒரு புதிய முயற்சியைத் துவக்குகிறோம். இந்த முயற்சி நலம் பயக்கட்டும்.