Sunday 17 December 2023

மார்கழித் திங்கள்

மார்கழி மாதம் பிறக்கிறது. விவசாயப் பணிகளுக்கு அதிகாலை விழித்தெழல் என்பது அவசியமானது ; உபயோகமானது. ஆநிரைகள் வளர்ப்பவர்களுக்கும் அதிகாலைப் பொழுதில் பணிகள் இருக்கும். மாட்டுக்கு தண்ணீர் காட்டுவது ; வைக்கோல் வைப்பது என. இன்று நாம் பணி புரியும் முறை என்பது பெரும் மாற்றம் கண்டு விட்டது. எனினும் இப்போதும் அதிகாலை விழித்தெழல் ஓட்டப்பயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் உகந்தது. மார்கழி அதிகாலை விழித்தெழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு மாதம்.  

இன்று எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அதாவது இந்த மார்கழியில் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ அனைத்தையும் ஒருமுறை சேவிக்கலாம் என எண்ணினேன். வைணவத்தில் திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள். மொத்த திவ்யதேசங்கள் 108. அதில் வைகுண்டம், பரமபதம் இரண்டையும் தவிர மற்றவை பூலோகத்தில் உள்ளன. சோழ நாட்டில் 40, நடுநாட்டில் 2, பாண்டிய நாட்டில் 18, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, வடநாட்டில் 11 என்பதாக இந்த 106 திவ்யதேசங்கள் அமைகின்றன. 

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மார்கழி மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு திவ்ய தேசம் என மோட்டார்சைக்கிளில் சோழ நாட்டு திவ்ய தேசங்களை சேவித்தேன். பின்னர் அவ்வப்போது சில திவ்ய தேசங்களை சேவித்திருக்கிறேன். 

இன்று மீண்டும் ‘’சோழ நாட்டு திவ்யதேசங்கள்’’ என்ற எண்ணம் தோன்றியதும் இதுவரை சேவித்த தலங்கள் எவை என்று கணக்கிட்டேன். மொத்த 40 சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 39 திவ்ய தேசங்களை சேவித்திருப்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். திருச்சி அருகில் உள்ள திருவெள்ளறை திவ்ய தேசம் தவிர மற்ற அனைத்து திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன். 

நடுநாட்டின் இரண்டு திவ்ய தேசங்களையும் சேவித்திருக்கிறேன். 

இந்த ஆண்டில் இன்னும் தரிசிக்காத திவ்யதேசங்களை சேவிக்க உளம் கொண்டுள்ளேன். காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் தங்கினால் கணிசமான தொண்டை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்க முடியும். சென்னையில் இரு நாட்கள் தங்கினாலும் சேவிப்பதற்கு பல திவ்ய தேசங்கள் உள்ளன. 

இப்போது கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஊரில் எப்போதும் இருக்க வேண்டிய நிலை. இராமாயண நவாஹத்துக்கான ஏற்பாடுகள் உள்ளன. ஈஸ்வர ஹிதம்.