Thursday 28 December 2023

வாடகை ( நகைச்சுவைக் கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் ஓர் அறச் செயல்பாடு ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். அதற்கு 5000 சதுர அடி இடம் தேவை. பொருத்தமான இடம் ஊரில் உள்ள பிரபலமான அறக்கட்டளை ஒன்றிடம் இருந்தது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரை அந்த அறக்கட்டளையை அணுகி அந்த இடத்தை வாடகைக்குப் பெற்றுத் தருமாறு கூறினார். தன்னிடம் யாரேனும் ஒரு உதவி கேட்டால் அதனை உடனே செய்ய வேண்டும் என்று அமைப்பாளர் நினைப்பார்.  அமைப்பாளருக்கு அந்த அறக்கட்டளையில் யாரையும் தெரியாது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரிடம் ‘’ நீ சென்று பேசினால் தான் சரியாக வரும்’’ என்றார். தனது திறன் மீதும் திறமைகள் மீதும் இத்தனை நம்பிக்கை வைக்கப்படுகிறதே என்ற உவகையில் அந்த அறக்கட்டளையை அணுகினார் அமைப்பாளர். விஷயத்தை எடுத்துச் சொன்னார். இடம் கிடைக்க நான்கு மாதம் ஆனது. வாரம் ஒரு தடவையாவது அந்த அறக்கட்டளை அலுவலகத்துக்கு செல்வார் அமைப்பாளர். எனவே அங்கிருந்த ஊழியர்கள் அமைப்பாளருக்கு நண்பர்கள் ஆனார்கள். 

அமைப்பாளரின் நண்பர் அந்த 5000 சதுர அடி இடத்தில் தனது அறசெயலை மேற்கொண்டார். ஒரு மாதம் முடிந்து வாடகை கொடுக்கும் நாள் வந்தது. அதாவது ஒன்றாம் தேதி. நண்பர் அமைப்பாளரிடம் வாடகையைக் கொடுத்து அறக்கட்டளையில் செலுத்திடச் சொன்னார். வாடகையை அமைப்பாளரின் நண்பர் தான் நேரில் சென்று செலுத்தியிருக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால் அது நிகழவில்லை. அறக்கட்டளை அமைப்பாளரின் அணுகுமுறையால் கவரப்பட்டு அந்த இடத்துக்கு மிக மிகக் குறைந்த வாடகையே நிர்ணயித்திருந்தது. அமைப்பாளர் அறக்கட்டளை அலுவலக ஊழியர்களைச் சந்திக்கலாமே என்று அங்கே சென்று வாடகையை செலுத்தி விட்டு ஊழியர்களிடம் அளவளாவி விட்டு வந்தார். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் வாடகையை செலுத்திடுமாறு நண்பர் கேட்டுக் கொண்டு தொகையை அளிக்க அமைப்பாளரும் அப்படியே செய்தார். 

வாடகை என்பது ஒரு மாதம் ஒரு இடத்தைப் பயன்படுத்தி விட்டு அடுத்த மாதம் முதல் தேதி அன்று செலுத்தப்பட வேண்டியது. 1லிருந்து 5 தேதிக்குள் என்பதும் 1லிருந்து 7 தேதிக்குள் என்பதும் பொது நடைமுறை. 

அமைப்பாளர் அதில் ஒரு மாற்றம் செய்தார். அதாவது உதாரணத்துக்கு ஜனவரி மாதம் அந்த இடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் பிப்ரவரி முதல் தேதிக்கு ஒருநாள் முன்பு ஜனவரி 31 அன்று மாலை ஜனவரி வாடகையை செலுத்தி விடுவார். அந்த அறக்கட்டளையினர் அமைப்பாளரின் இந்த செயல் கண்டு புளங்காகிதம் அடைந்து விட்டனர். இவ்வாறு செய்ய எப்படி உங்களுக்குத் தோன்றியது என்று கேட்டனர். 

அமைப்பாளர் சொன்னார் : ‘’முன்பெல்லாம் மாத ஊதியம் 1ம் தேதி கொடுப்பார்கள். பின்னர் அதனை முதல் மாதத்தின் கடைசி நாளன்று வழங்கினார்கள். ஊழியர்கள் அனைவரும் பணம் ஒருநாள் முன்னரே கிடைக்கிறதே என்று மகிழ்ந்தார்கள். நாம் கொடுக்க வேண்டியதையும் அவ்வாறே செய்ய வேண்டும் அல்லவா?’’ 

அந்த அறக்கட்டளையிடம் வாடகை கொடுக்கும் பணியை அமைப்பாளரே செய்து வந்தார். சமயங்களில் தனது சொந்தக் காசில் வாடகையை செலுத்தி விட்டு அந்த ரசீதை நண்பரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொள்வார் அமைப்பாளர். அந்த அறக்கட்டளையின் முதல் ரசீது அமைப்பாளர் அளிக்கும் பணத்துக்கான ரசீது என்ற நடைமுறையை உருவாக்கி விட்டனர் அறக்கட்டளையினர். 

சில நடைமுறை வசதிகளுக்காக அமைப்பாளரின் நண்பர் வேறு இடம் மாற முடிவு செய்தார். இடத்தைக் காலி செய்து விட்டு சாவியை ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர்தான் சாவியை ஒப்படைக்க சென்றார். அமைப்பாளரிடம் எப்போதும் வாடகையைப் பெற்றுக் கொண்டு ரசீது அளிக்கும் ஊழியர் சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது கண்ணீர் விட்டு அழுது விட்டார். அவர் அழுவதைக் கண்டதும் அமைப்பாளருக்கும் கண்ணீர் வந்தது. 

***

அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. 

அதனை அவர் வாடகைக்கு விட்டார். 

ஒரு மாதம் கூட வாடகை முதல் வாரத்தில் செலுத்தப்பட்டதில்லை. 15 தேதி ஆகி விடும். சமயத்தில் 25 தேதியும் ஆகும். 

கடைசி மூன்று மாதம் வாடகையே செலுத்தவில்லை. மூன்று மாதம் முடிந்த பின்னால் இந்த மூன்று மாத வாடகையை அட்வான்ஸ்க்காக அட்ஜஸ்ட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். 

அட்வான்ஸ் அட்ஜெஸ்ட் ஆகி விட்டது என்பதால் இடத்தைக் காலி செய்து ஒப்படையுங்கள் என்றார் அமைப்பாளர். ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இத்தனை நாள் பழகியதை நினைத்து ஒப்புக் கொண்டார் அமைப்பாளர். 

நவம்பர் 1 அன்று கொடுத்திருக்க வேண்டிய வாடகை. இரண்டு மாதம் ஆனது. தினமும் ஃபோன் செய்து அக்டோபர் வாடகை எப்போது தருவீர்கள் என்று கேட்பார் அமைப்பாளர். விதவிதமான பதில்கள். விதவிதமான காரணங்கள். அமைப்பாளர் நூடுல்ஸ் ஆகி விட்டார். 58 நாட்கள் தாமதமாக இன்று கணக்கில் செலுத்தினர் வாடகையை. அமைப்பாளருக்கு சற்று முன் குறுஞ்செய்தி வந்தது.