Tuesday 5 December 2023

பூம்புகார்

கடல் காணச் செல்வது என்பது என்றுமே உற்சாகம் கொள்ளச் செய்வது. முன்னர், வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அந்த வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 

இன்று பூம்புகார் சென்றிருந்தேன். நெல்லூர் அருகே நிலை கொண்டிருக்கும் புயலால் வங்கக் கடல் நுரைத்து அலையடித்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்து கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன கடலலைகள். கரையிலிருந்து அலைகளை நோக்கிச் சென்று அலைகளுக்குள் நின்று கொண்டேன். கடலில் நிற்கையில் எப்போதும் என் உளம் பொங்கும். உள்ளத்தில் இப்போது எத்தனையோ எண்ண அலைகள். கடலலைகளில் எனது எண்ண அலைகள் சங்கமமாயின. 

அலைகளில் நிற்கும் போது ‘’காவிரி போற்றுதும்’’ நினைவு வந்தது. ஏன் என்று தெரியவில்லை. அந்நினைவு எழுந்த போது ஒரு நிறைவும் எழுந்தது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை. சமுத்திர நீரை மும்முறை தலையில் தெளித்துக் கொண்டேன்.