Saturday 23 December 2023

சுஷிலுக்கு ஒரு கடிதம்

 அன்புள்ள சுஷில் குமார் பாரதி,


சற்று நேரம் முன்னால் , தங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாவல் குறித்து எதையெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் பதிவில் எழுதி விட்டேன். என்றாலும் தங்கள் குரல் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. சில மணி நேரங்கள் முழுமையாக என் மனத்தை ஆக்கிரமித்து நிறைந்த எழுத்தின் சொந்தக்காரனின் குரலைக் கேட்க முயலாமல் இருந்திருந்தால் இந்த நாள் பூர்த்தியாகியிருக்காது. தங்களுடனான உரையாடல் அளித்த மகிழ்ச்சி மிகப் பெரிது சுஷில். 

உங்கள் நாவலை மிகவும் கச்சிதமானது என வாசிக்கும் போதும் வாசிக்கும் பின்னும் உணர்ந்தேன் சுஷில். உடல் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். மனம் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். 

நீங்கள் மேலும் பல நாவல்களை எழுதுவீர்கள் சுஷில். பல பெரிய நாவல்கள். அவற்றை எழுத நீங்கள் மெனக்கெட வேண்டும் என்பதில்லை . உங்கள் மனதில் நாவலுக்கான கரு என ஒன்று உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கும் கணத்திலிருந்து உங்கள் மனதில் அது தானாகவே வளர்ந்து ஒரு நாவலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது முகஸ்துதி இல்லை சுஷில். உங்கள் முதல் நாவலின் பிரதி கொண்டிருக்கும் அடர்த்தி கூறும் கட்டியம் அதனைக் காட்டுகிறது. 

மீண்டும் வாழ்த்துக்கள் சுஷில். 

அன்புடனும் பிரியத்துடனும்,

பிரபு